#BREAKING மாணவர்களுக்கு குட்நியூஸ்.. 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ்.. முதல்வர் அறிவிப்பு..!
தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 10 மாதங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பொதுத்தேர்வு தேதி நெருங்கி வருவதால் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் திறக்கப்பட்டன.
இந்நிலையில், அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களான 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் இந்த மாதம் 8 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் நலன் கருதி பாடத்திட்டத்தில் 40% குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் அந்த பாடங்களை தயார் செய்தாலே போதுமானது என பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுவிட்டன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது பற்றி முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது சட்டப்பேரவையில் பேசி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடப்பு ஆண்டில் 9,10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இந்த மூன்று வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றி ஆல் பாஸ் அளிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது. மேலும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை கேட்ட பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டும் இதேபோன்று பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.