அம்போவாகுமா 8 வழிச் சாலைத் திட்டம் ? சுற்றுச் சூழல் அனுமதி கிடைக்கலைன்னா திட்டதை தொடர மாட்டோம்!! கைவிரித்த மத்திய அரசு !!
சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தற்போது மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதி அளிக்கவில்லை என்றால் இத்திட்டத்தை தொடர மாட்டோம் என உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆய்வு செய்யாமல் செயல்படுத்தப்படுவதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த முறை விசாரணையின் போது, 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனை அடுத்து கடந்த 14-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, திட்டத்துக்கு நிலம் கையப்படுத்த காலக்கெடு ஏதும் நிர்ணயிக்காமல் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில், இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாலைக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக 1200 மரங்கள் நட இருய்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வழிச்சாலை அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி அவசியம் என்பதால் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமல் சட்டப்படி திட்டத்தை தொடர மாட்டோம் என மத்திய அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, திட்டத்துக்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதனிடையே மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் 8 வழிச்சாலைத் திட்டத்தில் பெரும் மாறுதல் செய்து அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.