ஹெச்.ராஜா மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்கு! வழக்கறிஞர்கள் சங்கம் அதிரடி...
நீதிமன்றத்தையும், போலீஸாரையும் கடுமையாக விமர்சித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமணம் அருகே மெய்யாபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் இந்த ஊர்வலம் சென்றது.
அப்போது, குறிப்பிட்ட பகதியில் ஊர்வலம் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக போலீசார் கூறினர். போலீசார் கூறியதை ஏற்க மறுத்த ஹெச்.ராஜா, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலமும் சென்றது. போலீசாருடன், ஹெச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹெச்.ராஜாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தையும், போலீசாரையும் கடுமையாக விமர்சித்த ஹெச்.ராஜாமீது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுனர்களின் கருத்தை அரசு கேட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்போவதாக வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஜனநாயக சங்க வழக்கறிஞர்கள் நாளை உயர்நீதிமன்றத்தின் முன்பு ஹெச்.ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் போலீஸ் நிலையத்தில் பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.