60 லட்சம் பெந்தகோஸ்தே ஓட்டு திமுகவுக்குதான்... மேடையில் ஸ்டாலினை தெறிக்கவிட்ட சர்ச் பாதர்..
அதுபோல மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களே, நீங்கள்தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர், நீங்கள்தான் தேவனால் எழுப்பப்பட்ட கோரேசு ராஜா கிறிஸ்தவ மக்களின் நலனை பாதுகாக்க அவர்களின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்ற பல ஆண்டுகளாக கட்டமுடியாத தேவ ஆலயங்களையும் கட்டி எழுப்புவும் ஆண்டவரே எங்களின் ஜெபத்திற்கு பதிலாக உங்களை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை உணர்ந்து நாங்கள் உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம்.
தமிழகத்தில் 50 ஆயிரம் பெந்தகோஸ்தே திருச்சபைகள் இருக்கிறது என்றும் அதில் உள்ள 60 லட்சம் வாக்குகளும் திமுகவுக்கு தான் என பாதிரியார் ஒருவர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
சமீபத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் திமுக வெற்றி பெறுகிறது என்றால் அது கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போட்ட பிச்சை என பேசி அது சர்ச்சையே ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்தப் பேச்சும் வைரலாகி வருகிறது. 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தள்ளது. திமுகவை வெற்றிபெற்று விடக்கூடாது என்பதற்காக அதிமுகவை காட்டிலும் பாஜக மற்றும் இந்துத்துவ இயக்கங்கள் முதல் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பல்வேறு வெறுப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். ஆனாலும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தனிப் பொரும்பான்மையுடன் ஆட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. பாஜகவின் எதிர்ப்பு அலையே திமுக வெற்றிக்கு காரணம் என்றும், பாஜகவுடனாக கூட்டணியே அதிமுகவின் வீழ்ச்சிக்கு பிரதான காரணம் என்றும் கருத்து நிலவி வருகிறது.
ஆக திமுக எதிர்க்கட்சியாக இருந்தது முதலே பாஜகவுக்கும் திமுகவுக்குமான மோதல் இருந்து வருகிறது. தற்போது அக்கட்சி ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் பாஜகவின் எதிர்ப்பும், விமர்சனமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அரசு கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அதிமுகவை காட்டிலும் பாஜக மிகத் தீவிரமாக எதிர்த்து வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், பயன்பாட்டில் இல்லாத கோவில் நகைகள் உருக்கி வங்கியில் முதலீடு செய்யும் திட்டம், தமிழில் அர்ச்சனை, நீட் தேர்வு விலக்கு மசோதா என அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை தொடர்ந்து பாஜக எதிர்த்தும், விமர்சித்து வருகிறது. தொடர்ந்து இந்துக்களுக்கும், இந்து மக்களின் மத உணர்வுக்கும் எதிராக திமுக செயல்பட்டு வருகிறது என்றும், இந்து அறநிலைத்துறை என்ற போர்வையில் கோவில்களை திமுக கபளீகரம் செய்து வருகிறது என்றும், பாஜக மற்றும் இந்து அமைப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
திமுக என்பது இந்து மக்களுக்கு எதிரானது என்றும், குறிவைத்து இந்து கோவில்களை அழிப்பது, இந்து பண்டிகைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்றும் தொடர்ந்து பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க சமீபத்தில் திமுகவின் வெற்றி குறித்து பேசிய கன்னியாகுமரி மாவட்டம் அரமனையைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவர், கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையில் சர்ச் அமைக்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், திமுகவையும் விமர்சித்து பேசியிருந்தார். அதாவது அமைச்சர் மனோ தங்கராஜ்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் சேர்த்துச் சொல்கிறேன், எத்தனை கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோயிலுக்கு மேல் சட்டை அணியாமல் சாமி கும்பிட்டாலும் ஒருவர் கூட உங்களுக்கு ஓட்டு போடமாட்டார்கள். ஆனால் இன்று திமுக வெற்றி பெற்றிருக்கிறது என்றால், அது கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் போட்ட பிச்சை என பேசியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையானது. அதேபோல் அந்த கூட்டத்தில் அவர் பாரதமாதா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் அவர் கைதாகி பின்னர் விடுதலையாகி உள்ளார். அதாவது திமுக இந்துக்களுக்கு விரோதமான காட்சி என பாஜக கூறுவதும், திமுகவுக்கு நாங்கள்தான் பிச்சை போட்டோம் என கிறிஸ்தவர்கள் கூறுவதும் என உரலுக்கு ஒரு பக்கம் தான் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல இரு தரப்பினரும் திமுகவை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பெந்தகோஸ்தே சர்ச் பாதர் ஒருவர், ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெந்தேகோஸ்தே சபையில் உள்ள 60 வாக்குகளும் ஸ்டாலினுக்கு தான் என பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதன் விவரம் பின்வருமாறு:- தேசத்திலே ஒரு ராஜா வருவான், அவன் நலிவடைந்த சிறுபான்மையின மக்களுக்கு உதவி செய்து, பாழடைந்த ஜெப ஆலயத்தை கட்ட உதவுவான் என்று அவன் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருக்கிறது.
அதுபோல மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களே, நீங்கள்தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர், நீங்கள்தான் தேவனால் எழுப்பப்பட்ட கோரேசு ராஜா கிறிஸ்தவ மக்களின் நலனை பாதுகாக்க அவர்களின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்ற பல ஆண்டுகளாக கட்டமுடியாத தேவ ஆலயங்களையும் கட்டி எழுப்புவும் ஆண்டவரே எங்களின் ஜெபத்திற்கு பதிலாக உங்களை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை உணர்ந்து நாங்கள் உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம். பெந்தகோஸ்து திருச்சபை மாமன்றத்தில் 50 ஆயிரம் திருச்சபைகள் இருக்கிறது. 60 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். எனவே வரவுள்ள நகராட்சி, பேரூராட்சி என அனைத்துத் தேர்தல்களிலும் நீங்கள் வெற்றி பெற பெந்தேகோஸ்தே திருச்சபை மக்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தமிழகம் முழுவதும் உங்கள் ஆட்சி தொடர பெந்தேகோஸ்தே மக்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என அவர் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பலரும் பல வகைகளில் வரவேற்றும் விமர்சித்து வருகின்றனர்.