இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் தமிழ் மாநில குழுக் கூட்டம், கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், டி.ராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரி மாவட்டத்துக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எங்கள் இயக்கத்தின் தலைவர் ஜீவா, எழுத்தாளர் பொன்னீலன் ஆகியோரை எங்களுக்கு கொடுத்த பெருமை குமரி மாவட்டத்துக்கு உள்ளது.

நடைபெற இருக்கும் பஞ்சாப், கோவா, உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவை பொதுமக்கள் தோற்கடிக்க செய்ய வேண்டும். இதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இதுதான் மற்ற கட்சிகளின் கருத்தாகவும் உள்ளது.

சென்னையில், 2 கப்பல்கள் மோதிய விபத்தில் கடலில் எண்ணெய் பரவி கிடக்கிறது. இதனால், கடல்வாழ் உயிரினங்களான மீன்கள், ஆமைகள் போன்றவை இறந்து கரையில் ஒதுங்குகின்றன. மீனவர்கள், கடலோர பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தேசிய இடர்பாடுகளை எதிர்கொள்ள போதுமான தொழில்நுட்பம் இந்தியாவில் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் இருக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகள் சாதகமாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.