பொருளாதார சரிவு குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது என்பதற்காகவே தான் கைது செய்யப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்த முனனாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 5 பெர்சன்ட் மோடி என பிரதமரைக் கலாய்த்தார். 

சிபிஐ காவல் முடிந்ததையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வரும் 5ஆம் தேதி வரை சிபிஐ காவலை நீட்டித்து நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டார். நீதிமன்ற வளாகத்திற்குள் சிதம்பரத்தை சந்தித்துப் பேச குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களுக்கு 5 நிமிடம் அனுமதி வழங்கப்பட்டது. அதற்காக நீதிபதிக்கு சிதம்பரம் நன்றி தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு வெளியே வந்த ப.சிதம்பரத்திடம், 15 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்து நீங்கள் ஏதேனும் கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலேதும் தெரிவிக்காத சிதம்பரம், “ஐந்து சதவிகிதம் (5 பர்சன்ட்) ” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அவரிடம் “ஐந்து சதவிகிதம்” என்றால் என்ன சார் என்று செய்தியாளர் மீண்டும் கேள்வி எழுப்ப, “5 சதவிகிதம் என்ன என்பது குறித்து உங்களுக்கு நினைவில் இல்லையா” என்று கேள்வி கேட்டார். தொடர்ந்து பேசிய பொருளாதார சரிவு குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது என்பதற்காகவே தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 

ஜிடிபி சதவிகிதத்தை சொல்கிறீர்களா என அந்த செய்தியாளர் திரும்பவும் கேட்க, சிரித்துக்கொண்டே சென்றார் சிதம்பரம். இதுதொடர்பாக 15 வினாடிகள் ஒளிபரப்பாகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.