பெரியார் மறைந்து 47வருஷம்... ஆனா...!! இன்னும் செம்ம மாஸ், மார்தட்டும் கி.வீரமணி..!!
பெரியாரைப் பொறுத்தவரை அவர் உடலால் மறைந்து 47 ஆண்டுகள் ஆனாலும், உலகில் தத்துவமாய் வாழ்கிறார்.
பெரியார் உடலால் மறைந்து 47 ஆண்டுகள் ஆனாலும், உலகில் தத்துவமாய் வாழ்கிறார் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.இது குறித்து கி.வீரமணி இன்று (ஜூலை 18) வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்:- "கோவையில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சரண் அடைந்துள்ளார். இத்தகைய ஒரு அமைப்பு இயங்கி வருவது தமிழ்நாட்டுக் காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அறியாமல் இருக்க முடியாது. தனிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தால் மட்டும் போதாது; அதற்கு மூலகாரணமாக இருப்பவர்களைக் கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கையை மேற்கொண்டால்தான் இம்மாதிரியான செயல்கள் மீண்டும் மீண்டும் தொடராத நிலை ஏற்படும்.
முதல்வரின் பதில்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஈரோட்டில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, 'சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தனது வழக்கமான பதிலைக் கூறினார்; அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து, 'சட்ட நடவடிக்கைகள் தொடரும்' என்றார்! அதே நாளில் பிற்பகலில் திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள பெரியார் சிலை அவமானப்படுத்தப்பட்டதை அறிந்து, திருக்கோயிலூர் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் காவல்துறைக்குப் புகார் கொடுத்தனர். திமுக சார்பிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும்கூட புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்துக் கட்சியினரும் ஒன்று திரண்டு கண்டன முழக்கம் எழுப்பி, குற்றவாளிகளைக் கைது செய்ய ஆர்ப்பாட்டத்தினை அறவழியில் நடத்தியுள்ளனர்! முதல்வரும், அமைச்சரும் கூறியதில் எந்தப் பொருளும் இல்லை என்பதைத்தானே இந்த திருக்கோயிலூர் தொடர் பெரியார் சிலை அவமதிப்பு நிகழ்ச்சி காட்டுகிறது? கடும் நடவடிக்கைக்கு எது தடை? கூட்டணி தர்மமா? நமக்குப் புரியவில்லை. பெரியாரைப் பொறுத்தவரை அவர் உடலால் மறைந்து 47 ஆண்டுகள் ஆனாலும், உலகில் தத்துவமாய் வாழ்கிறார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து
தமிழ்நாட்டில் பெரியார் வாழ்க்கையில் சந்திக்காத எதிர்ப்பா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த கண்டன அறிக்கையில் தெரிவித்ததுபோல, 'என் மீது காலணி வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார்' என்று கூறியபடி தரணி காணா தன்னிகரில்லாத தலைவர் அவர்; இன்றும் வாழுகிறார் கொள்கை லட்சியங்களாக, இன்றும் காவிக் கிருமிகள் தமிழ்நாட்டு மக்களுக்குள் நுழையாத தடுப்பூசியாகப் பயன்படுகிறார் என்பதைத்தானே சிலையை அவமதிக்கும் சிறுமதியாளர்களின் சினம் காட்டுகிறது?
ராகுல் காந்தி கருத்து
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'எவ்வளவு தீவிரமான வெறுப்பும், ஒரு மகத்தான தலைவரைக் களங்கப்படுத்த முடியாது' என்று தமிழில் கருத்துத் தெரிவித்துள்ளார். கடலூரில் தன் மீது போடப்பட்ட ஒரு காலணிக்குப் பிறகு மற்றொரு காலணியையும் பெற்றுப் பாதுகாத்தவர் பெரியார் என்பது தெரியுமா? சிவகங்கையில் பழைய காலணி தோரணம் கட்டி வரவேற்றபோது அதனைக் கலைக்க ஆத்திரப்பட்டவர்களை அப்படியே இருக்கட்டும் என்று ஆணையாக, பதில் கூறிய பகுத்தறிவுப் பகலவனின் நெஞ்சுரம் பற்றி தெரியுமா? அடிக்க அடிக்க எழும்பும் பந்து எங்களது திராவிடர் இயக்கம்! அடிக்க அடிக்க எழும்பும் பந்து எங்களது திராவிடர் இயக்கம், எதிர்ப்பென்னும் உரத்தால், செழிக்கும் பயிர், கொழிக்கும் பண்ணை. செய்யுங்கள், தொடருங்கள், அதன்மூலம்தான் மீண்டும் காவியை அடியோடு துடைத்தெறிய துளியும் சஞ்சலம் அற்ற சரியான முடிவு வரும், வாய்ப்பு விரைந்து வரும்! நீட் தேர்வு, கரோனா தொற்றுப் பரவல், தொடர் உயிரிழப்புகள், வேலையின்மை, வறுமையின் வாட்டம், பசி, பட்டினி, ஆட்சியாளரின் வித்தைகள், இவற்றைத் திசை திருப்ப, தோல்வி முகங்களை மறைக்க காவிச் சாயப் பூச்சுதான் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துள்ள வியூகமா?
கருப்புச்சட்டைப் படை களத்தில் என்றும் காத்திருக்கிறது
முயன்று பாருங்கள், களத்தில் வெறியாட்டம் ஆடுங்கள்! வரவேற்கிறோம் - கழகங்கள் வளர, கழக ஆட்சி மலர வேகப்படுத்தும் உங்களது சில்லுண்டி சேஷ்டைகள் தொடரட்டும்!நாங்கள் அந்த அறுவடைக்குக் காத்திருக்கிறோம். கருப்புச்சட்டைப் படை களத்தில் என்றும் காத்திருக்கிறது".இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.