17,686 ஆசிரியர்கள்-ஊழியர்கள் மீது பதியபட்ட 408 வழக்குகள் ரத்து.. எடப்பாடியார் பரிவு, ஆசிரியர்கள் நெகிழ்ச்சி..
மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் மாண்புமிகு. முதல்வர் அவர்களின் அறிவிப்பினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்தி வரவேற்கின்றோம்.
ஆசிரியர்-அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையினை ரத்துசெய்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
2019 ல் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை திரும்பப்பெற தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாண்புமிகு. முதல்வர் அவர்களை தொடர்ந்து வலியுறுத்திவந்ததோடு கடந்தமாதம் 04.01.2021 அன்று மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை ஆணையரை நேரில் சந்தித்து துறை ரீதியதாக வலியுறுத்தவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகோள் வைத்தோம்.
மேலும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்-அரசு ஊழியர்கள் பல்வேறு வழிகளில் வலியுறுத்திவந்தார்கள். இந்நிலையில் மாண்புமிகு. முதல்வர் அவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான 7,898 ஆசிரியர்- அரசு ஊழியர்கள் மற்றும் மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 17,686 ஆசிரியர்கள் - ஊழியர்கள் மீது பதியபட்ட 408 வழக்குகளையும் திரும்பப்பெறுவதாக அறிவித்த அறிவிப்பு மூலம் பாதிக்கபட்ட ஆசிரியர்-அரசு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.
மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் மாண்புமிகு. முதல்வர் அவர்களின் அறிவிப்பினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்தி வரவேற்கின்றோம். அதேவேளையில் கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றித்தர ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.