ஹார்டுவேர் கடையில் 4 கோடி ஹவாலா பணம்.. அதிர்ச்சியில் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்..
சென்னையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பூக்கடையில் நாராயண முதலியார் தெருவில் உள்ள ஒரு ஹார்டுவேர் கடையில் வருமானத்திற்கு அதிகமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடைக்குச் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, கணக்கில் வராத 2 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்தத் தொகை குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட பொழுது, அதே பகுதியில் ஏகாம்பரம் தெருவில் அமைந்துள்ள 2 ஸ்டீல் கடைகளில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட பொழுது, 2 ஸ்டில் கடைகளிலும் தலா 2 கோடி ரொக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொழுது அவை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஹவாலா பணம் என வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் கைப்பற்றப்பட்ட பணம் குறித்தும் இந்த ஹவாலா பணம் யாருக்கு கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டுள்ளது என்ற கோணத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.