ஆந்திர மாநிலத்துக்கு 4 தலைநகரங்கள் அமைக்க முதலமைச்சர் ஜெகன் மோகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் ஆந்தி மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் அமோக வெற்றி பெற்று முதலமைச்சரானார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆந்திர மாநிலத்தின் முதலமைச்ராக ஜெகன் மோகன் பொறுப்பேற்றதில் இருந்து அம்மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு அதிரடி திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகிறார் . 5 துணை முதலமைச்சர்கள், இலவச கல்வி என பல புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.

அந்த வரிசையில் ஆந்திரா மாநிலத்திற்கு புதிதாக 4 தலைநகரங்களை அமைப்பதற்கான திட்டத்தில் அவர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆந்திராவைச் சேர்ந்த பாஜக எம்.பி. வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆந்திர மாநிலத்துக்கு 4 தலைநகரங்களை உருவாக்க முதலமைச்சர் ஜெகன் மோகன் திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்.

நிர்வாக ரீதியாக ஆந்திர மாநிலத்தை 4 பகுதிகளாக பிரிக்கவும், சிறிய நிர்வாக பகுதிகளை ஏற்படுத்தி, வளர்ச்சியை அதிகரிக்கவும் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக குறிப்பிட்டார்.

மத்திய அரசிடம் இது குறித்து ஜெகன் மோகன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், இதன் மூலம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சமமாக முன்னேற்றம் அடையும் என்றும் வெங்கடேஷ் தெரிவித்தார்.