3000 கொரோனா நோயாளிகளை காணவில்லை... கர்நாடக அமைச்சர் பகீர் தகவல்..!
பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை மாயமாகிவிட்டனர் என்று கர்நாடக அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார்.
வட மாநிலங்களைப் போல கர்நாடகாவிலும் கொரோனா பரவல் தொற்று தீவிரமாகி உள்ளது. கர்நாடகாவில் தினந்தோறும் சராசரியாக 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே, கொரோனா பரவல் கை மீறி சென்றுவிட்டது. எனவே, பொதுமக்கள் மன்னிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்தார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகாவில் 14 நாட்களுக்கு பொது முடக்கத்தை முதல்வர் எடியூரப்பா அறிவித்தார்.
இந்நிலையில் கர்நாடக அமைச்சர் அசோகா பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாயமாகிவிட்டதாக பகீரென தெரிவித்துள்ளார். இதுகுறித்து அசோகா கூறுகையில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு நாங்கள் இலவசமாக மருந்துகள் அளிக்கிறோம். இதன் மூலம் 90 சதவீதம் பேர் குணமாகின்றனர். ஆனால், பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை மாயமாகிவிட்டனர். அவர்களுடைய மொபைல் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
அவர்களுடைய வீடுகளிலும் அவர்கள் இல்லை. அவர்கள் எல்லாம் எங்கு சென்றார்கள் எனத் தெரியவில்லை. இதுபோன்றவர்கள் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிறகே மருத்துவமனைக்கு வருகிறார்கள். இதுதான் இங்கே நடக்கிறது. இதன் காரணமாகவும் கொரோனா தொற்று அதிகமாகப் பரவுகிறது. இவர்களைக் கண்டுபிடிக்கும்படி காவல் துறையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார்.