சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 3 போலீஸார் உயிரிழப்பு.. கதி கலங்கும் காவல்துறை..
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 காவல்துறையினர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாம் அலை மிக தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் தினசரி 3700 முதல் 4000 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 காவல்துறையினர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாம் அலை மிக தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் தினசரி 3700 முதல் 4000 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகின்றனர். குறிப்பாக முன்களப் பணியாளர்களாக செயல்பட்டு வரும் காவல்துறையினர் 13 முதல் 15 பேர் வரை தினசரி கொரோனா தொற்றால் பாதிப்பிற்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு முதல் இதுவரை 3300 க்கும் அதிகமான காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாககாவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் அலையில் தீவிரம் காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 4 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். அதிலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த 18 ஆம் தேதி யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு உதவி ஆய்வாளர் சக்திவேல் தொற்றால் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
அதேபோல நேற்று கோட்டூர்புரம் நுண்ணறிவுப் பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வந்த கருணாநிதி என்பவர் தொற்றால் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்தார். இந்நிலையில் இன்று அண்ணா நகர் போக்குவரத்துக் காவல் பிரிவில் பணியாற்றி வந்த மகாராஜன் மற்றும் காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் SBCID பிரிவில் பணியாற்றி வந்த முருகேசன் ஆகிய இரண்டு காவல்துறையினர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றின் தீவிரம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 காவல்துறையினர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.