அடுத்து அமையவுள்ள மத்திய பாஜக அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த வாரிசுளான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார், ஜெயகுமார் மகன் ஜெயவர்த்தன் மற்றும் ராஜன் செல்லப்பா மகள் ராஜ் சத்யன் ஆகியோர் மத்திய அமைச்சர்கபன் ஆகப் போவதாக அதிமுக வட்டாரத்தில் பலமாக பேச்சு அடிபடுகிறது.
ஏழு கட்ட தேர்தல்கள் முடிந்து வரும் மே 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், ஆனால் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன.
அதே நேரத்தில் நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக ஒரு மௌனப் புரட்சி நடந்து வருகிறது என்றும், மோடி ஆட்சி தூக்கி எறியப்படும் என்றும் காங்கிரஸ் கூறி வருகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும்போது மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கடந்த அமைச்சரவையில் அதிமுக உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி தர பாஜக தயாராக இருந்தும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறுத்துவிட்டார். ஆனால் தற்போது அவர் மறைந்துவிட்ட நிலையில் எப்படியாவது மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா ? என அதிமுக பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது.

இந்நிலையில்தான் அதிமுக சார்பில் நாடாளுமன்ற வேட்பாளர்களாக போட்டியிட்ட வாரிசுகள் மூன்று இப்போதே மத்திய அமைச்சர்கள் கனவில் மிதக்கிறார்களாம்.
மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன், மத்திய நெடுஞ்சாலைத் துறைக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார், மத்திய சுகாதாரத் துறைக்கு அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்த்தன் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.
