BREAKING: தொடங்கியது 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு… கொரோனா தொற்றாளர்களுக்கு ஸ்பெஷல் ஏற்பாடு
தமிழகத்தில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.
முதல்கட்டமாக 6ம் தேதி உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதில் 74.37 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் 2ம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள் என மொத்தம் 12376 இடங்களுக்கு வாக்குப்பதிவு தொடங்கி இருக்கிறது.
6652 வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
கொரோனா தொற்றாளர்கள், அதற்கான அறிகுறி உள்ளவர்கள் வாக்களிக்க மாலை 5 முதல் 6 மணி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தேர்தலை முன்னிட்டு போலீசார், ஊர்க்காவல் படையினர் 40 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.