28 எம்எல்ஏ.,க்கள்.. 17 மாவட்டச்செயலாளர்கள்... பண்ணை வீட்டில் தடபுடல் விருந்து... உற்சாகத்துடன் கிளம்பும் ஓபிஸ்
அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சிக்குள் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தேனியில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஒட்டிய பேனர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சிக்குள் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தேனியில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஒட்டிய பேனர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேனி, இன்று பிற்பகலில் சென்னை செல்ல உள்ளதாக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தகவல் அளித்துள்ளார். போடி தொகுதியான நாகலாபுரத்தில் நியாய விலைக் கடைகள் மற்றும் கடன் உதவி வழங்கும் விழா, செல்போன் வழங்கும் நிகழ்ச்சி ஆகிய விழாக்களில் ஓபிஎஸ் இன்று காலை கலந்து கொண்டார். நாகாலாபுரம் செல்லும் வழியில் அரண்மனைபுதூர் விலக்கு அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலர் வைகை கருப்புஜீ மறறும் அவரது மகன் பொன்சி தலைமையில் திரண்டு நின்றிருந்த அதிமுக தொண்டர்கள், 100 அடி நீளமுடைய ‘நாளைய முதல்வர்’என்ற பேனரை பிடித்து வரவேற்பு அளித்தனர். மேலும் ஓ.பி.எஸுக்கு மாலை அணிவித்து, நாளைய முதல்வரே என்று கோஷமிட்டனர்.
இதனிடையே வரும் 7ம் தேதி வரை ஓ பன்னீர் செல்வம் பெரியகுலத்திலேயே தங்கி இருக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இன்று பிற்பகலில் சென்னை செல்ல உள்ளதாக தெரிவித்தார். கடந்த 2ம்தேதி சொந்த ஊருக்கு சென்றிருந்த ஓ.பி.எஸ், இன்று சென்னை திரும்புகிறார். சென்னையில் அமைச்சர்கள் அவரை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து அமைச்சர்களும் 3 நாட்கள் சென்னையில் இருக்க முதல்வர் பழனிசாமி அறிவுறுத்திய நிலையில், ஓ.பன்னீர் செல்வம் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தங்களது ஆதரவாளர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொங்க்கு மண்டலத்தை சேர்ந்தவர்களும் தேனி, பெரியகுளம் சென்று ஓ.பி.எஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸின் பண்ணை வீட்டில் நடந்த விருந்தில் 28 எம்.எல்.ஏ.,க்கள், 17 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது எடப்பாடி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.