மின்சாரத் துறையில் 2340 கோடி ரூபாய் ஊழல்.. ஓய்வுபெற்ற அரசு மின்பொறியாளர் காந்தி பகீர்..
கடந்த 2001 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரையில் மின்சாரத்தின் விலை என்பது ஒரு யூனிட் 17.28 லிருந்து ரூபாய் 21. 80 வரையிலும் கூட வாங்கப்பட்டிருக்கிறது.
மின்சாரத் துறையில் 2340 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக ஓய்வுபெற்ற அரசு மின்பொறியாளர் காந்தி தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், மின்வாரியத்தில் ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி கடனில் இருக்கின்ற சூழ்நிலையில் 30 ஆயிரம் கோடியை மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இனிமேல் மின்சாரம் வாங்க வேண்டி, இல்லாத நிறுவனத்திற்கு 2340 கோடி ரூபாயை மின்வாரியம் அள்ளித்தர ஒப்புக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில் ஒரு பகுதியை ஏற்கனவே வழங்கிவிட்டது.
கடந்த 2001 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரையில் மின்சாரத்தின் விலை என்பது ஒரு யூனிட் 17.28 லிருந்து ரூபாய் 21. 80 வரையிலும் கூட வாங்கப்பட்டிருக்கிறது. இதனிடையே கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே மின்சாரத்தை வாங்க வேண்டாம் என ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவும் அளித்துள்ளது. குறிப்பாக ஒப்பந்தப்படி மின்சாரம் வாங்காவிட்டாலும் மூலதன கட்டணம் என்ற பெயரில் இந்த நிறுவனத்திற்கு ஆண்டுக்கு தோராயமாக 750 கோடி ரூபாய் தரப்பட்டு வந்துள்ளது.
மேலும் 2016ஆம் ஆண்டில் இருந்து நிலையத்தில் எரிபொருள் ஒப்பந்தம் முடிந்து போனதால் உற்பத்தி செய்யும் நிலையும் தற்போது இல்லை. 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த கட்டணமும் தரப்படவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் தனியாருக்கு லாபமான வகையில் மட்டும் அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது. மேலும் மின்சாரம் வாங்கிய காலத்தில் பில்லிங்கில் நடந்திருக்கும் குளறுபடியால் மட்டும் 1300 கோடி வர வேண்டி உள்ளது.
ஆனால் மேல்மட்ட நிர்வாகத்தினர் மூலம் மின்வாரியம் இன்று ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பில் சிக்கித்தவிக்கிறது. இத்தனை முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அது மட்டுமல்லாமல் இவ்வளவு ஊழலுக்கு நிச்சயம் அரசாங்கமும் ஒரு காரணமாக இருக்கும். குறிப்பாக அரசுக்கு தெரியாமல் இது போன்ற எந்தவிதமான ஒப்பந்தம் போட இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.