2021 Major political events - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... 2021-இன் முக்கிய அரசியல் நிகழ்வுகள்!
தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றன. திமுக மட்டும் தனித்து 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம்10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கட்டிலில் ஏறியது.
2021-ஆம் ஆண்டு தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. அந்தப் பரப்பரப்புக்குக் காரணம், சட்டப்பேரவைத் தேர்தல். 2021 ஜனவரி முதல் டிசம்பர் வரை நடந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகள் என்னென்ன?
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் உடல்நலனை கருதி ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று 2020 டிசம்பர் 29 அன்று அறிவித்த பிறகு அவருடைய ரசிகர்கள், பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். ரஜினியை அரசியலுக்கு அழைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்து முடித்த சசிகலா, பெங்களூரு சிறைச்சாலையிலிருந்து பிப்ரவரியில் விடுதலையானார். தீவிர அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா, தேர்தல் நெருக்கத்தில் அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக கூறி அறிக்கை வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6 அன்று தேர்தல் நடைபெற்றது. 72.78 வாக்குகள் இத்தேர்தலில் பதிவாயின. சுமார் ஒரு மாதம் கழித்து மே 2 அன்று, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றன. திமுக மட்டும் தனித்து 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக மட்டும் 66 தொகுதிகளில் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம்10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கட்டிலில் ஏறியது.
சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக, தேமுதிக உள்ளிட்ட பலய கட்சிகள் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. என்றாலும் நாம் தமிழர் கட்சி 6.80 சதவீத வாக்குகளைப் பெற்று, வாக்கு வங்கியை பல மடங்கு உயர்த்தியது.
மே 7 அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பின்போது ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்று கூறி ஸ்டாலின் பதவியேற்றது கவனத்தை ஈர்த்தது.
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. 2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு பாஜக சார்பில் 4 எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்குள் நுழைந்தனர்.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிடைத்தது. அவருக்கு தகவல் ஒலிபரப்புத் துறை, கால்நடை, மீன்வளம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்விக்குப் பிறகு அதிமுகவை கைப்பற்றுவேன் என்று மீண்டும் சசிகலா அரசியலுக்குத் திரும்பினார். அதிமுக பிரமுகர்களுடன் செல்போனில் பேசி அதை ரிலீஸ் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்.
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் ஆகஸ்ட் 31ஆம் தேதி பஞ்சாப் மாநில ஆளுநராக பதவியேற்றார். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.
அக்டோபரில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 90 சதவீத வெற்றியை திமுக கூட்டணி பெற்றது.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர், தங்கமணி தொடர்புடைய இல்லங்கள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தொடர்ந்து ரெய்டுகள் நடத்தியது அரசியலில் பரபரப்பை கிளப்பியது.
அதிமுகவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்தல் மூலம் நிரப்பப்படும் என்று அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து நடந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வீட்டின் சாவியை ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளாக ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.