2-ஜி ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு தேதி அறிவிப்பு !! திமுக பதற்றத்தில் உள்ளதா ?
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு தேதியை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி இன்று அறிவிக்கிறார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில நிறுவன நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அன்று தீர்ப்பு தேதியை அறிவிக்காமல், நவம்பர் 7-ம் தேதி அதாவது இன்று வெளியாகும் என நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்திருந்தார். தீர்ப்புடன் கூடுதல் ஆவணங்களை சேர்க்க வேண்டிய பணிகள் நடப்பதால் தீர்ப்பு தேதி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் , எனவே, நவம்பர் 7-ம் தேதி தீர்ப்பு தேதி வெளியாகும் எனவும் தெரிவித்தார்.
அதன்படி இன்று தீர்ப்பு தேதி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஆ.ராசா மற்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.