மே 23 க்குப் பிறகு ஆட்சி மாற்றமா ? நீடிக்கும் இழுபறி … திமுகவா ? அதிமுகவா ?
இடைத் தேர்தலில் திமுக 15 தொகுதிகளை கைப்பற்றிவிட்டால் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நிலையில் தற்போது இரு தரப்பும் ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், மக்களவைத் தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. 18 ம் தேதி நடக்கும் தேர்தலில் பதிவான வாக்குகள், மே, 23 ல் எண்ணப்படுகின்றன.
ஆனால் தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மக்களவைத் தேர்தலைவிட, சட்டசபை இடைத்தேர்தலுக்குதான் திமுகவும்இ அதிமுகவும் முன்னுரிமை தருகின்றன. காரணம், இது, தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் வாழ்வா, சாவா போராட்டம் என்பதுதான்.
தேர்தல் நடக்கும், 18 தொகுதிகளில் ஆறு தொகுதியிலாவது வெற்றி பெற்றால் தான், அ.தி.மு.க.,வுக்கு சட்டசபையில், 'மெஜாரிட்டி' கிடைக்கும்; அதன் மூலம் ஆட்சியும் தொடரும். ஒருவேளை, அந்த, 18ல், 15 இடங்களை, தி.மு.க., கைப்பற்றினால். அ.தி.மு.க., ஆட்சி கவிழ்ந்து, தி.மு.க., ஆட்சி உருவாக வாய்ப்பு இருக்கிறது.
எனவே, தி.மு.க.,வை அதிக இடங்களில் ஜெயிக்க விடக்கூடாது என்று, அ.தி.மு.க.,வும்; ஆறு இடத்தில், அ.தி.மு.க.,வை ஜெயிக்க விடக்கூடாது என்று, தி.மு.க.,வும் போட்டி போட்டு பணியாற்றுகின்றன.
அதே சமயம், நேரத்தில் மக்களவைத் தேர்தலை கண்டுகொள்ளவே இல்லை என்ற விமர்சனத்துக்கு ஆளாகக்கூடாது என்று இரு கட்சிகளுமே நினைக்கின்றன. அதனால், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரிடம், 18 தொகுதிகளையும் ஒப்படைத்து விட்டார் முதலமைச்சர் பழனிசாமி.
இதே போல் ஸ்டாலின் மருமகன் சபரீசன் தலைமையிலான, ஓ.எம்.ஜி., எனப்படும், 'ஒன் மேன் குரூப்'பில் உள்ளவர்கள், 18 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். எனினும், செலவு விஷயத்தில், அ.தி.மு.க.,வை போல தாராளமாக இல்லை என திமுகவினர் புலம்புகின்றனர்.
அதே நேரத்தில் தினகரன் கட்சியை தலைதுாக்க விடால் செய்ய என்னென்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய எடப்பாடி ஒரு டீமை முடுக்கிவிட்டுள்ளார்.
திமுக முகாமில், தோல்வி என்றாலும், இரண்டாம் இடத்தை பிடிக்க வேண்டும்; ஆர்.கே., நகரில் நடந்ததுபோல, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டால், விளைவுகள் மிக மோசமாக இருக்கும்' என, திமுகவினரை சபரீசன் எச்சரித்துள்ளார்.
திமுக, அதிமுக என இரு தரப்பும் ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதற்கான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க தினகரன் தரப்பு மிகக் கூலாக ஓடியாடி வேலை செய்கிறது.
எது எப்படியோ எடப்பாடி தொடர்வாரா ? அல்லது ஆட்சி கவிழுமா ? மே 23 ஆம் தேதி விடை தெரியும்.