18 தொகுதிகளில் இனி இடைத் தேர்தல் நடத்தலாம் !! திருவாரூர், திருப்பரங்குன்றம் சேர்த்து 20 தொகுதிகளில் தேர்தல் எப்போது ?
டி.டி.வி.தினகரனின்ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அந்த 18 தொகுதிகளும் காலி உள்ளது என அறிவிக்கலாம் என்றும் அதில் இடைத் தேர்தல் நடத்தலாம் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.
டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதில் 18 எம்எல்ஏக்கள் பதவியை பறித்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆகையால் எடப்பாடி ஆட்சி தப்பியது. தகுதி நீக்கம் செய்ததில் எந்தத்தவறும் இல்லை என்று நீதிபதி சத்தியநாராயணா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். சபாநாயகர் தனபால் முடிவில் எந்த தவறும் இல்லை எனவும் நீதிபதி கூறியுள்ளார். மேலும் பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து 18 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி, 18 பேரையும் தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்றும் பேரவைத் தலைவர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தீர்ப்பளித்தார்.
அதே நேரத்தில் அந்த 18 தொகுதிகளும் இனி காலியானது என அறிவிக்கலாம் என்றும், அந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தலாம் என நீதிபதி சத்யநாராயணன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து 18 தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மேலும் தமிழக சட்டப் பேரவைச் செயலாளர் 18 தொகுதிகளும் காலியாக உள்ளது என அறிவிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.
ஏற்னவே திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தற்போது மேலும் 18 தொகுதிகளையும் சேர்ந்து மொத்தம் 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும், இது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுத்து இடைத் தேர்தல் அறிவிக்குமா ? அல்லது நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்துமா என தெரிய வரும்.