18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு…. எடப்பாடி வீட்டில் அவசர ஆலோசனைக் கூட்டம்…
டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரது இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் செயல்பட்ட 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து, 18 எம்எல்ஏக்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அரசு மற்றும் டி.டி.வி.தினகரன் என இரு தரப்பு வாதங்களும், முடிந்து . வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், முதல் பெஞ்ச் தள்ளி வைத்திருந்தது. இதையடுத்து, இவ்வழக்கில் எப்போது தீர்ப்பு வரும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் 1மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. தீர்ப்பு எப்படி வரும்? தீர்ப்பை எப்படி எதிர்கொள்வது ? அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றவைகள் குறித்து இதில் ஆலோசிக்கபபட்டு வருவதாக தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.