14 கார்களில் ஏற்றிச் செல்லப்பட்ட சொத்து ஆவணங்கள் !! வாக்குமூலம், சம்மன் என சசிகலா குடும்பத்தினருக்கு வருமான வரித்துறையால் நெருக்கடி !!!
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை அதிகாரிகள் 14 கார்களில் ஏற்றிச் சென்றதாகவும், இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதோடு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்துடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, தஞ்சை, மன்னார்குடி, திருச்சி, கோடநாடு, நாமக்கல், கர்நாடக மாநிலம் பெங்களூரு, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், மற்றும் புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட 187 இடங்களில் 1,600-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஆப்ரேஷன் கிளீன் மணி என்ற பெறரில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை இன்று 4 ஆவது நாளாக நீடிக்கிறது.
சசிகலா உறவினர்களில் வீடுகளில் நடத்தப்பட்டுவரும் இந்த சோதனையில் போலி நிறுவனம் பெயரில் 1200 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இந்த சோதனையில் அதிக எண்ணிக்கையில் ரூபாய் நோட்டுகளும், கிலோ கணக்கில் தங்க கட்டிகளும் சிக்கி உள்ளதாக தெரிகிறது.
இந்த போலி கம்பெனிகள் மூலம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கோடிக்கணக்கில் பரிமாற்றம் செய்தது தெரியவந்தது.
விவேக் பெயரில் உள்ள அசையா சொத்துகளுக்கான ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்த போது அதில் 20 க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் தொடங்பபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து 100 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.
இதே போன்று மன்னாகுடியில் உள்ள கல்லூரி விடுதியில் நடந்த சோதனையில் வைரங்கள் அதிகம் கிடைத்து இருக்கிறது என்றும் சுமார் ஆயிரம் கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சசிகலாவின் உறவினர்களிடம் வருமான வரித்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்த விரைவில் நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.