தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கட்டாயம் நடைபெறும்.. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்..!
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மாநில அளவில் நீட் தேர்வை நடத்திக்கொள்கிறோம் என மத்திய அரசிடம் கோரியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மாநில அளவில் நீட் தேர்வை நடத்திக்கொள்கிறோம் என மத்திய அரசிடம் கோரியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. மற்றும் பல மாநில கல்வி வாரியங்கள் கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளன. பிளஸ் 2 வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு மற்றும் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்து இன்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்கள் செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, மத்திய கல்வி அமைச்சருடனான கலந்துரையாடலுக்குப் பிறகு இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி;- நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடத்தப்படும் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. அதனை நாங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். வேண்டுமெனில் மாநில அளவில் நீட் தேர்வை நடத்திக்கொள்கிறோம் என்று கூறியுள்ளோம். மத்திய அரசின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு நீங்கள் வேண்டுமானால் நீட் தேர்வினை நடத்திக்கொள்ளுங்கள். மாநில கல்லூரிகளுக்கு வேண்டாம் என்ற கோரிக்கை முன்வைத்துள்ளோம் என்றார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி;- தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கட்டாயம் நடக்கும். கொரோனா பரவல் குறைந்த பிறகு, பிளஸ் 2 தேர்வு தொடர்பாக முடிவு எடுக்கப்படும். மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்தவில்லை எனில், தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு அல்லது மத்திய கல்வி நிறுவனங்களுக்கு படிக்க செல்லும் மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே கண்டிப்பாக பிளஸ் 2 தேர்வு நடக்கும். சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து மத்திய அரசிடம் வரும் செவ்வாய் கிழமைக்குள் தெரிவிக்கப்படும் என்றார்.