முதலமைச்சர் உறுதியாக கொடுக்கப்படும் என கூறி உள்ளார்கள். அவர் கட்டளையில் பணியாற்றுபவன் நான். என்றைக்கு அளிக்க சொல்கிறாரோ அன்று ஏற்பாடு செய்ய வேண்டியது எனது கடமை
பெண்களுக்கு ஊக்கத் தொகை கொடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக கூறியுள்ளார், அவர் வாக்கை நிறைவேற்ற கூடியவன் நான், என்றைக்கு அவர் சொல்கிறாரோ, அன்று அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டியது தன் கடமை என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி காக்கை பாடினியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்,தமது வாக்கினை பதிவு செய்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதாவது ஜி.எஸ் டி கூட்டத்தில் தங்களது உரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியாக சொல்கிறார்களே ? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,
நான் கலந்து கொண்ட கூட்டத்தில் தகவலோடு உரையாற்றி என்னோட வாதத்தை அறிக்கையாக சமர்ப்பித்திருக்கிறேன். இதனை பிரச்சனையாக்குவதாக சொன்னால் ஜி.எஸ்.டி நிலைக்குழுவில் என்னை ஏன் உறுப்பினராக போட்டார்கள். சில வதந்திகள் ஊடகங்களில் வரலாம். என்னைப் பொறுத்தவரை தெளிவாக சொல்கிறேன். ஒன்றிய நிதி அமைச்சராக இருந்தாலும் ஒன்றிய நிதித்துறை செயலாளராக இருந்தாலும் பல மாநிலங்களில் உள்ள நிதி அமைச்சர் ,முதல்வர் ,துணை முதல்வர்களோடு இணைந்து பேசி நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் செயலாற்றிக்கொண்டு இருக்கிறோம்.

நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நானும் மகாராஷ்டிரா சுற்றுசூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே, மேகாலயா சுற்றுசூழல் துறை அமைச்சர் சங்மா கலந்து ஆலோசித்தோம். அனைவரும் ஒரே மாதிரியான கருத்தை எடுத்துரைத்தோம். செயல்பட வேண்டியது மாநிலங்கள் ,மாவட்டங்கள் ,உள்ளாட்சிகள் .இதனை வைத்துதான் கட்டமைப்பை திருத்த முடியும் எல்லாவற்றையும் ஒரே ஒரு டெல்லியில் இருந்து செய்ய முடியாது எனச்சொன்னோம் . இத்தனைக்கும் மேகாலயாவில் பாஜக கூட்டணி அரசுதான் இருக்கிறது . எனவே உண்மையை யார் சொன்னாலும் உண்மை தான். சில சமயம் நேரத்தை சரியாகவும் சில சமயம் தாமதமாகவும் கொடுக்கிறார்கள். என்னை பொறுத்தவரை தேர்தலை சந்திக்கும் போது சொன்ன 2003 ல் பொறுப்புள்ள நிதி மேலாண்மை சட்டம் வந்த பிறகு 2014 வரைக்கும் சில வருடம் அம்மையார் ஆட்சி அதன் பிறகு ஐந்து வருடம் தலைவர் கலைஞர் ஆட்சி . 2003 ல் இருந்து 2014 வரை நிதி நிலை சட்டத்திற்கு ஏற்ப இருந்தது .
வருவாய் கணக்கில் பற்றாக்குறையே கொஞ்சம் உதிரியோ இருந்தது. 2014 க்கு பிறகு அம்மையார் சிறைக்கு சென்ற பிறகு சரியான தலைமை இல்லாததால் ஏழு ஆண்டுகளில் நிதி நிலைமை சரிந்து போனது வருவாய் பற்றாக்குறை அதிகரித்து கடன் வாங்க கூடிய எல்லையை மீறி சுமார் 30 ஆயிரம் கோடியை ஒளிவு மறைவாக எடுத்துள்ளார்கள் என்பதை வெள்ளை அறிக்கையில் காண்பித்து உள்ளேன். அந்த அளவு இருந்த சூழ்நிலையை சிறந்த தலைமை திருப்பி வந்த பிறகு சிறந்த முதலமைச்சர் வந்த பிறகு ஒரே ஆண்டில் இரண்டாவது அலையை தாண்டி மூன்றாவது அலையை தாண்டி முதல் முறை ஆட்சிக்கு வந்தவர் என்ற அனுபவ குறையை தாண்டி பால்விலை குறைப்பு ,பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் , பெட்ரோல் விலை குறைப்பு ,மகளிர் சுயஉதவி குழு கடன் 2600 கோடி தள்ளுபடி, குடும்ப அட்டைதாரருக்கு 4000 என பல வாக்குறுதிகளை நிறைவேற்றிய பிறகுஇந்த ஆண்டு நிதி நிலைமை சீர்திருத்தத்தை காண்பிக்க போகிறோம் .இது தான் சிறந்த தலைமையின் அடையாளம். இதன் வெளிப்பாட்டை விளைவை வைத்து யாருடைய ஆட்சி சிறந்தது என்பதை மக்கள் முடிவெடுக்கட்டும் என்றார்.

பெண்களுகளுக்கன ஊக்கத்தொகை எப்போது கொடுக்கப்படும் ?
என்ற கேள்விக்க பதில் அளித்த அவர், முதலமைச்சர் உறுதியாக கொடுக்கப்படும் என கூறி உள்ளார்கள். அவர் கட்டளையில் பணியாற்றுபவன் நான். என்றைக்கு அளிக்க சொல்கிறாரோ அன்று ஏற்பாடு செய்ய வேண்டியது எனது கடமை.
நிதி நிலை அறிக்கை எப்படி இருக்கும் ?
ஒரு பட்ஜெட் என்பது வரக்கூடிய ஆண்டிற்கான இலக்கு. ஏற்கனவே நான் எழுதியுள்ள கட்டுரையில் பட்ஜெட்டிற்கும் அதன் பிறகு திருத்திய மதிப்பீட்டிற்கும் சுமார் 40 முதல் 50 சதவிகிதம் வேறுபாடு உள்ளது. இதனை மாற்றி விளைவை அடிப்படையாக வைத்து இந்த வருடத்தின் கணக்கை ஒழுங்காக காண்பித்து இதுதான் தலைமையின் பலன் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.தலை இல்லாத வால்கள்,கால்கள் ஆட்சி நடத்தியதால் நிதி நிலைமை சரிந்தது. வருவாய் பற்றாக்குறையை இந்த வருடம் திருத்துவோம்.
வாரம்தோறும் இதற்கான கூட்டம் நடத்தி கோப்புகளை தீவிரமாக ஆய்வு செய்து திருத்திக்கொண்டு வருகிறோம்.அதனை செம்மையாக செய்து முடிப்போம் என்றார்.‘மகளிர் உரிமைத் தொகையான’ மாதம் 1000 ரூபாயையும் வழங்கப் போகிறோம். யாரையும் நாங்கள் ஏமாற்றப் போவதில்லை. இந்த ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான் என்று மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கூறியது குறிப்பிடதக்கது.
