அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள்…. அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்…
2019 ஆம் ஆண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தேதிகள் மற்றும் ரிசல்ட் தேதிகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்தார்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றபின் கல்வித் துறையில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். ஓராண்டுக்கு முன்னரே 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு தேதிகள் மற்றும் ரிசல்ட் தேதிகள் அறிவிக்கப்படும் என கடந்த ஆண்டு அறிவித்து அதன்படி நடத்தப்பட்டது.
இதே போன்று இந்த கல்வியாண்டின் தொடக்கத்திலேயே, பிளஸ் 2 , பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் மற்றும் ரிசல்ட் தேதிகளை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
அதன் படி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1 முதல் மார்ச் 19ம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிவு 19.4.19 அன்று வெளியிடப்படும்.
பிளஸ் 1 பொதுத்தேர்வு 06.03.19 முதல் 22.03.19 வரை நடக்கும். தேர்வு முடிவு 8.5.19 அன்று வெளியிடப்படும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 14.3.19 முதல் 29.3.19 வரை நடக்கும். தேர்வு முடிவுகள் 29.4.19 அன்று வெளியிடப்படும்.
மாணவர்கள், தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில, தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.