ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, மருத்துவ காப்பீடு என பல வகைகளில் இந்த காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நமக்கு எது அத்தியாவசிய தேவை என்பதை இந்த தொகுப்பில் காணலாம். 

ஆயுள் காப்பீடு

இது ஒருவர் ஆயுள் உள்ளவரை பீரிமியம் செலுத்த வேண்டும் அல்லது குறிப்பிட்ட காலம் (வயது முதிர்வு காலம் வரை) பீரிமியம் செலுத்த வேண்டும். பின்னர், முதுமைக் காலத்தில் குறைந்தபட்ச தொகை உங்கள் தேவைக்கும், மரணமடைந்த பின்னர் உங்களுன் முழு முதிர்வுத் தொகை உங்கள் நாமினி அல்லது சட்டப்படியான வாரிசுகளுக்கு அளிக்கப்படும்.

இதன் கீழ் பிரதமரின் ஆயுள் காப்பீடு மற்றும் முதலமைச்சரின் ஆயுள் காப்பீடு மற்றும் பல்வேறு தனியார் வங்கி நிறுவனங்களும் ஆயுள் காப்பீடு திட்டங்களை வழங்குகிறது.

பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம்: Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY)

பிரதமரின் ஆயுள் காப்பீடு என்பது ஒரு வருட ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும், இது ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்கது, எந்த காரணத்திற்காகவும் (இறப்பிற்கு) கவரேஜ் வழங்குகிறது.

ஏதாவது ஒரு வங்கி கணக்கு வைத்திருக்கும் 18-50 வயதுக்குட்பட்ட தனிநபர் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்து பலன் பெறலாம். 50 வயதை முடிக்கும் முன் திட்டத்தில் சேரும் நபர்கள், வழக்கமான பிரீமியத்தைச் செலுத்துவதன் மூலம், 55 வயது வரையில் காப்பீடு திட்ட பலன்களை பெற இயலும்.

பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் தொகை- ரூ.436/- (ஆண்டுக்கு)

ஆயுள் காப்பீடு முதிர்வுத் தொகை- ரூ. 2 லட்சம் ரூபாய் (ஏதேனும் காரணத்தால் மரணம் ஏற்பட்டால் வழங்கப்படும்)

இதேபோல், பல் வேறு தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் ஆயுள் காப்பீடு திட்டங்களை வழங்குகின்றன. அதில், வயது வரம்பிற்கு ஏற்றவாறு பிரீமியம் தொகை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக்காப்பீடு

இன்றைய நாளில் மிகத் தேவையான ஒன்று இந்த மருத்துவக் காப்பீடு. பொதுவாக தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே மருத்துவக்காப்பீடு வழங்கி வருகிறது. தேவைபடுபவர்கள் தனியார் நிறுவனங்களிடமும் மருத்துவக்காப்பீடுகளை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த மருத்துவக்காப்பீடு, ஒருவருக்கு ஏற்படும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்கிறது. பெரிய பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான மருத்துவ கட்டணம் பெரும்பாலோனரிடம் இருப்பதில்லை. அது போன்ற சமயத்தில் இந்த மருத்துவ காப்பீடு பெரிதும் உதவுகிறது.

மருத்துவ காப்பீட்டில், தனிநபர் மற்றும் குழு மருத்துவ காப்பீடும் வழங்ப்படுகிறது. இதில் செலுத்தப்படும் பீரிமியம் பெரும்பாலும் ரிட்டர்ன் கிடைக்காது. விபத்து அல்லது ஏதாவது நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது இந்த மருத்துவக் காப்பீடுகள் உரிமை கோரல் மூலம் உங்களுக்கு பணமில்லா சேவையை மேற்கொள்ள வலிவகுக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சிறு சிறு சேமிப்பில் பெரிய லாபத்துடன் வளமான வாழ்க்கை! பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்கள்!

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு

உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம்: Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY)

விபத்து, மரணம் மற்றும் ஊனமுற்றோர் காப்பீட்டை ஆண்டுக்கு வெறும் ரூ. 20 பிரீமியத்தில் வழங்குகிறது மத்திய அரசு. ஒவ்வொரு ஆண்டும் சந்தாதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே டெபிட் செய்யப்படுகிறது. 18-70 வயதுக்குட்பட்ட அனைவரும் இந்த விபத்துக் காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் PMSBYஇத் திட்டத்தில் சேரலாம்.

விபத்து ஏற்பட்டால், கோரிக்கைக்கான ஆவணங்களை வங்கி/தபால் நிலையத்தில் சமர்ப்பிக்கலாம். விபத்து மூலம் மரணம் நிகழ்ந்திருப்பில் ரூ.2 லட்சமும், நிரந்தர குறைபாடு அடைந்திருப்பின் ரூ.2 லட்சமும், பகுதி ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சமும் இந்த காப்பீடு மூலம் வழங்கப்படும்.

பீமா டிரினிட்டி

இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அனைத்து விதமான பலன்களையும் கொடுக்கும் ஒரே இன்சூரன்ஸ் பாலிசி திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) கூறியுள்ளது. இதன் மூலம் ஆயுள் காப்பீடு, சொத்துக் காப்பீடு, விபத்துக் காப்பீடு, உடல்நலக் காப்பீடு ஆகியவை ஒரே பாலிசியில் அடங்கும்.