தனக்கு ஈமச்சடங்கை தனது மகனோ, நான்கு மகள்களோ செய்யக் கூடாது என்றும், உடலை மருத்துவமனைக்கு தானம் செய்து, தனது சொத்தையும் உத்தரப்பிரதேச அரசுக்கு உயில் எழுதி வைத்து இருக்கிறார் 85 வயது முதியவர்.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்தவர் நாது சிங். இவருக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர். மகன் சஹரன்பூரில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. நாது சிங் தனக்கு சொந்தமான ரூ. 1.5 கோடி மதிப்பிலான வீடு மற்றும் நிலத்தை உத்தரப்பிரதேச அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார்.
தனது மனைவி இறந்த பின்னர் தனியாகவே நாது சிங் வசித்து வந்துள்ளார். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு தனது கிராமத்தில் இருக்கும் முதியோர் இல்லத்திற்கு சென்று தங்கியுள்ளார். மகனோ, மகள்களோ இவரை கவனித்துக் கொள்ளவில்லை. தனித்து விடப்பட்டார். முதுமையில் உதவிக்கு ஆள் இல்லாமல் திணறினார். இந்த நிலையில், விரக்தியடைந்த நாது சிங் தனது வீட்டை, நிலத்தை அரசுக்கு தானமாகக் கொடுத்து, தனது இறப்புக்குப் பின்னர் அந்த இடத்தில் பள்ளி அல்லது மருத்துவமனை கட்ட வேண்டும் என்று உயில் எழுதிக் கொடுத்துள்ளார்.
யூடியூப் பார்த்து குழந்தை பெற்று கொலை செய்த 15 வயது சிறுமி!
டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்து இருந்த பேட்டியில், ''இந்த வயதில் நான் எனது மகன், மருமகளுடன் வசித்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் என்னை நன்றாக நடத்தவில்லை. இதனால்தான், நான் சொத்தை அரசுக்கு எழுதி வைத்தேன்'' என்று நாது சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது உயிலில், இறந்தபின்னர் தன்னுடைய உடலையும் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்வி பயன்பாட்டிற்கு கொடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முதியோர் இல்லத்தின் மேலாளர் ரேகா சிங் கூறுகையில், ''இதுவரை முதியவரைப் பார்க்க அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் வரவில்லை. இல்லத்திற்கு வந்ததில் இருந்து முதியவர் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்படுகிறார். அரசுக்கு சொத்தை எழுதி வைக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார்'' என்று தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த பத்திரவு பதிவுத்துறை துணை பத்திரப்பதிவாளர் கூறுகையில், ''நாது சிங் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். அவர் இறந்த பின்னர் அது நடைமுறைக்கு வரும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
