திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில், இன்று பொங்கலை விழாவையொட்டி, பெண்கள் அவரவர் வீடுகளில் பொங்கல் படைத்து வழிபட அரசு அனுமதி அளித்துள்ளது. 

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில், இன்று பொங்கலை விழாவையொட்டி, பெண்கள் அவரவர் வீடுகளில் பொங்கல் படைத்து வழிபட அரசு அனுமதி அளித்துள்ளது.

கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். 10 நாட்கள் நடைபெறும், இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொள்ளும் பொங்காலை விழா நடைபெறும். 

இதில் கேரளம், தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். இக்கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். இது கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது.

இது போல 2009-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 25 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். இதுவும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. கடந்த ஆண்டு 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டதால் இந்த ஆண்டு 45 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இத்தகு சிறப்பு மிக்க ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பொங்கலை விழா, கடந்த 9-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அபிஷேகம், தீபாராதனை, உஷபூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை போன்றவை நடந்து வருகிறது. பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

அதன்படி இன்று காலையில் 10.50 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்குகிறது. தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவன் நம்பூதிரிப்பாடு ஸ்ரீ கோவிலில் இருந்து விளக்கில் தீபம் எடுத்து வந்து மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரியிடம் கொடுப்பார். அதனை கோவில் முற்றத்தில் அமைக்கப்பட்டு உள்ள பண்டார அடுப்பில் பற்ற வைத்து பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைப்பார். அப்போது அவரவர் வீடுகளில் பெண்கள் பொங்கல் படைத்து வழிபாடு நடத்துவார்கள். இன்று மதியம் 1.20 மணிக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்படும். அப்போது கோவில் சார்பில் நியமிக்கப்பட்டு உள்ள பூசாரிகள் வீடுகளுக்கு சென்று பொங்கல் நிவேத்யம் சடங்குகளை நிறைவேற்றுவார்கள்.

தொடர்ந்து மாலையில், சிறுவர்களின் குத்தியோட்டம், சிறுமிகளின் தாலப்பொலி அம்மன் ஊர்வலம் ஆகியவை நடக்கிறது. 

இதுபற்றி கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:-

கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு பக்தர்களை வீடுகளிலேயே பொங்கலிடுமாறு அறிவுறுத்தியிருந்தோம். இந்த ஆண்டும் கொரோனா பரவல் முடிவுக்கு வரவில்லை. எனவே பக்தர்களை இந்த ஆண்டும் வீடுகளிலேயே பொங்கலிட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்கல் விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி நாளை வரை 10 நாட்கள் நடக்கிறது. இவை அனைத்தும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்று கோவில் அறக்கட்டளை தலைவர் பி.அனில்குமார் தெரிவித்துள்ளார்.

நாளை வெள்ளிக்கிழமை இரவு காப்பு அவிழ்க்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது என்றார். மேலும், கடந்த ஆண்டை போலவே பிரதான சாலைகளில் பெண்கள் பொங்கலிடுவதற்கு வசதியாக, போக்குவரத்து தடை செய்யப்படும். தொடர்ந்து பக்தர்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி தொடங்கும். இவ்விழாவில் 200 பேர் வரை பங்கேற்கலாம் என அரசு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.