கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களில், சுமார் 4 சதவீதம் பேருக்கு நிரந்தரமாக வாசனை திறன் இழக்கும் அபாயம் இருப்பது புதிய ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டது.

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் துவங்கியது. இதன் தாக்கம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது தற்போது, வரை மூன்று அலைகளாக உருமாறியுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 56 லட்சத்துக்கு மேலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கரோனவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், கொரோனா முதல் அலையில் பாதிக்கப்பட்டவர்களின் நீண்ட கால உடல் உபாதைகள் தொடர்பாக, சுவீடன் நாட்டில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஏறக்குறைய 50 சதவீத மக்களுக்கு, நீண்ட காலமாக அல்லது நிரந்தரமாகக் கூட வாசனையை நுகரும் தன்மை இல்லாமல் போகலாம் என்று முதல்கட்ட ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, ‘தி கார்டியன்’இதழில் வெளிவந்த செய்தியில், முதல் அலையின்போது பாதிக்கப்பட்ட 100 நபர்களிடம் சுவீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. 

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலம் முதல், திடீரென வாசனை நுகரும் திறனை இழப்பது துர்நாற்றத்தை கண்டறிய முடியாமல் போவது ஆகியவை அசாதாரண அறிகுறிகளில் ஒன்றாக உருவெடுத்தது. கொரோனா பாதிப்பில் இருந்து பலர் மீண்ட போதிலும், சிலருக்கு மீண்டும் வாசனை திறன் இயல்பு நிலைக்கு வராமலேயே உள்ளது என்பதே, சுவீடன் ஆராய்ச்சி குழுவின் முதல்கட்ட ஆய்வு முடிவாகும். இந்த ஆய்வு முடிவுகளை மேலும் பல ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.

இதில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களில் 4 சதவீதம் பேருக்கு 18 மாதங்களுக்கு பிறகும் கூட வாசனை திறன் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதேசமயம், சிலருக்கு துர்நாற்றத்தை கண்டறியும் திறன் குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களில் 65 சதவீத மக்களுக்கு வாசனை திறன் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது அல்லது ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாத 20 சதவீத மக்களுடன் ஒப்பிடுகையில், இவர்களுக்கான பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிரிட்டனைச் சேர்ந்த சுகாதார பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், வாசனை திறன் இழப்பு அல்லது சுவையை கண்டறிய இயலாமல் போவது ஆகியவை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசனை திறனை முற்றிலுமாக இழந்த பலருக்கு மன அழுத்தம் ஏற்படும் என்றும், உணவு பழக்கத்தை மாற்றுபவர்களுக்கு உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து கூறும்போது, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு வாசனை திறன் இழப்பு ஏற்பட்டாலும், 5 வகையான சுவைகளை அவர்கள் உணர முடியும். குறிப்பாக, மசாலா பொருட்களை எளிதில் உணரலாம். சுவை உணர்வு இல்லாத போது மக்களில் சிலர் அதிக சர்க்கரை அல்லது கொழுப்பு வகை உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். மேலும், வறுத்த உணவு வகைகளை அதிகம் விரும்புவார்கள். இதுபோன்ற உணவை உண்பதன் மூலமாக அவர்கள் சற்று மகிழ்ச்சி அடைவார்கள்.

 வாசனை திறனை இழந்தவர்களுக்கு மீண்டும் 100 சதவீத அளவுக்கு அந்தத் திறன் திரும்ப கிடைக்காது. ஆனால், முறையாக பயிற்சி செய்தால், அன்றாட வாழ்க்கையை பாதிக்காத அளவுக்கு வாசனைத் திறனை மீட்டெடுக்க முடியும் என்கின்றனர்.