மன அழுத்தத்தை குறைப்பது எப்படி? நம் தேர்வு...நம் வாழ்வு!
மன அழுத்தத்தை குறைப்பது எப்படி? எனப்து பற்றி சில எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
'பிஸியான' வாழ்க்கைச் சூழலில் எதிர்காலத்தையும், கடந்தகாலத்தையும் நினைத்துக்கொண்டே கடத்தும் நொடிகளின் தொகுப்பே நம்முடைய வாழ்வு. அந்த நொடியில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் ஏராளம். எனவே, இந்த தொடர்ச்சியான மன அழுத்தமானது, நமது மூளையளவில் பெரிய மாறுதல்களை உண்டாக்குகின்றன. அதனால் நாம் பல சுவாரஸ்யமான தகவல்களை கூட எந்த உணர்வுமின்றி அணுகுவது இயல்பாகிவிட்டது. மன அழுத்தம் என்றவுடன், அது தீயது என்று முடிவுசெய்ய வேண்டியதில்லை. ஏனென்றால், மன அழுத்தத்தில் நல்லதும் உண்டு, தீயதும் உண்டு. ஆபத்து நேரத்தில் விரைந்து முடிவெடுக்க, பொறுப்பை நிறைவேற்றி முடிக்க, போட்டிகளுக்கும் நேர்முகத் தேர்வுகளுக்கும் தயாரிக்க, குடும்ப நிகழ்வுகளுக்கு முன்பாக ஏற்படுகிற அழுத்தம் உள்ளிட்டவை நல்ல மன அழுத்தம் . ஆனால், மன அழுத்தம் நாட்பட்டதாக நிலைக்கும்போதே, அது உடல் நலனைப் பாதிக்கிறது. மனநலனுக்கும் கேடானதாக வலுப்பெறுகிறது. இதன் தாக்கம், தனிமை, சோகம், வேலையிழப்பு, மனச்சோர்வு, மற்றும் மனதளவிலான பிரச்சனைகள் உள்ளிட்ட தவிர்க்க முடியாத நெகடிவ் சிந்தனைகளை நம் அனைவருக்கும் வழங்கியுள்ளது. எனவே, நாம் இந்த 2022 ஆம் ஆண்டினை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, தேவையற்ற நெகட்டிவ் செயல்களை கைவிடுவது அவசியமாகிறது. ஆரம்பகட்டத்தில் இருந்தே, நாம் அதற்காக நம்மை நாமே கட்டாயப்படுத்தி மகிழ்ச்சியூட்டும் செயல்களில் செலவிட வேண்டும். அதற்கான சில எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. வாக்கிங், ஸ்விம்மிங் உள்ளிட்ட அதிக உடல் ஆற்றல் தேவைப்படும் உடற்பயிற்சிகளைச் செய்வது உடலை இலகுவாக்கும்.
2. யோகா அல்லது தாய்ச்சி மனத்தை இலகுவாக்குவதுடன், உடலுக்கும் வலு சேர்க்கிறது.
3. தியானம் உள்ளிட்ட மனச் சமநிலைப் பயிற்சிகள் மன அழுத்தக் காரணிகள் மீதான நமது எதிர்வினையைப் பக்குவமாக வெளிப்படுத்த உதவுகின்றன.
4. அடிக்கடி மன அழுத்தம் தருகிற நிகழ்வுகளில் விழிப்புடன் இருப்பது.
5. தொடர் பயிற்சிக்குப் பிறகும் நம்மால் இயல்பு நிலைக்கு வர இயலாவிட்டால் மனநல மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.
ஆபத்து நேரத்தில் பெருகும் ஆற்றல்:
மன அழுத்தம் என்பது ஓர் எதிர்வினைதான். ஆபத்து, அவமானம், காத்திருப்பு, ஏமாற்றம் உள்ளிட்ட சூழலில் அதைத் துணிந்து சந்திக்க வேண்டும் அல்லது விலகிச் செல்ல வேண்டும். இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று சிந்தித்து முடிவெடுப்பதற்கு முன்பாகவே நம்முடைய எதிர்வினைகள் தொடங்கி முடிந்துவிடுகின்றன. சில வேளைகளில் அது நிறைவடைந்த பிறகுதான் நாம் நிதானத்துக்கே வருகிறோம்.
ஒருவரது உடலில் மன அழுத்தம், எவ்வளவுதான் ஆபத்துகள் இருந்தாலும் சில மணி நேரங்களிலோ, சில நாட்களிலோ மூளை, நரம்பு மண்டலம், தசைகள், இதயம் உள்ளிட்டவை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடுகின்றன. இருப்பினும், தங்கள் மன அழுத்தத்தை நிறுத்தி, சமநிலைக்கு வரும் வழி தெரியாமல் சிலர் தவிக்கிறார்கள். எனவே, HPA தொடர்ந்து இயங்க வேண்டியிருக்கிறது. இடைவிடாது செயல்படும் வாகனம் பழுதுபடுவதுபோல மனித உடலின் தசைநார், சுவாச உறுப்புகள், இதய, ரத்தக்குழாய், நாளமில்லாச் சுரப்பி, இரைப்பைக் குடல், நரம்பு, இனப்பெருக்க மண்டலம் உள்ளிட்டவை பாதிப்புக்குள்ளாகின்றன.
நம் தேர்வு, நம் வாழ்வு
மனம், உணர்ச்சிரீதியிலான எதிர்வினையானது தன்னுடைய, தன் குடும்பத்தினருடைய பாதுகாப்பு குறித்த கவலை, அவமானம், எரிச்சல், கோபம், சோகம், துயரம், நம்பிக்கையின்மை, படபடப்பு, அமைதியற்ற நிலை, மகிழ்ச்சியின்மை எனப் பல வகைகளில் வெளிப்படுகிறது. நாள்பட்ட மன அழுத்தமாக மாறுகிறபோது மனச்சோர்வு, பதற்றம், பாலுறவில் நாட்டமின்மை, கவனம் செலுத்துவதிலும் நினைவில் வைத்திருப்பதிலும் சிக்கல், நிலையில்லாத மனநிலை, போதைக்கு அடிமையாதல், அதிகப்படியான கோபம் என நம்மைப் பாதிக்கிறது.
நல்ல வேளையாக நம்மை வளப்படுத்துவதற் கான வழிமுறைகள் நிறைய உள்ளன. ஒருவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிற ஒரு நிகழ்வோ சூழலோ மற்றவருக்கும் அதே தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதேபோல, அனைவருக்கும் பொதுவான உத்திகள் என்று ஏதும் இல்லை. முக்கியமானது என நீங்கள் நினைக்கும் உத்தியைத் தேர்வுசெய்து தொடர்ந்து பயிற்சி எடுங்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியையும் மனத்துக்குச் சமநிலையையும் அளிக்கும்.