margazi vazhipadu day 4 songs and explanations
மார்கழி மாதம் வந்தால், காலை நேரங்களில் ஆலயங்களுக்குச் சென்று, செந்தமிழ்ப் பாக்களால் அமைந்த திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவற்றைப் பாடி, இறைவனைத் துதித்து வருவது நம் பண்டைய தமிழர் மரபு.
திருமால் ஆலயங்களுக்குச் சென்று காலையில் பாடுவதற்கு வசதியாக ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடலையும், மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவையையும் பாடி பரமன் அருள் பெறுவோம்..
***
திருப்பாவை- பாசுரம் - 4
***
ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பாசுரத்துக்கான - விளக்கவுரை:
திருப்பாவையின் மூன்றாவது பாசுரத்தில் நோன்பு நோற்பதால் கிடைக்கும் பலனைச் சொன்னார் ஆண்டாள்.
மும்மாரி பெய்து பசுக்கள் பாலால் இல்லம் நிறைத்து செல்வம் பெருகும் என்றவர், இந்தப் பாசுரத்தில் தாம் சொன்ன சுபிட்சத்துக்காக கண்ணனே கருணை மழையாகப் பொழிய வேண்டும் என்று வேண்டுகிறார்.
மழை மண்டலத்துக்குத் தலைவனாக விளங்கும் கண்ணனே! உன் கொடையில் எதையும் நீ ஒளிக்காமல் அருள வேண்டும். நீ செய்ய வேண்டிய பணி ஒன்றும் உண்டு. அது, நீ கடலினுள் புகுந்து, அங்கிருந்து நீரினை முகந்து கொண்டு பேரொலி எழுப்பி கர்ஜனை செய்து, ஆகாயத்தின் மேல் ஏறி, ஊழி காலம் முதலான அனைத்துக்கும் காரணனாக விளங்கும் எம்பெருமானின் திருமேனியைப் போலே கறுத்து, பெருமை பொருந்திய சுந்தரத் தோளுடையானும், நாபியிலே கமல மலர் கொண்டு திகழும் பெருமானின் வலக்கையிலே திகழும் சக்கரத்தாழ்வானாகிய திருவாழியைப் போலே ஒளிர்ந்து, இடது கரத்தில் திகழும் பாஞ்சஜன்யப் பெரும் சங்கினைப் போலே நிலை நின்று முழக்கி, உன் சார்ங்கம் ஆகிற வில்லில் இருந்து விரைந்து புறப்படும் அம்புகளைப் போலே, இந்த உலகத்தார் அனைவரும் வாழும்படியாகவும், கண்ணன் எம்மானுடன் கலந்து மகிழ நோன்பு நோற்கும் நாங்களும் உளம் மகிழ மார்கழி நீராட்டம் செய்யும்படி, தாமதம் ஏதுமின்றி மழை பொழிய வைத்திடுவாய்...- என்று கண்ணனை வேண்டுகிறார் ஆண்டாள்.
மழை எப்படிப் பொழிகிறது என்ற அறிவியல் நுட்பத்தைத் தம் பாசுரத்தில் புகுத்தி, அதற்குக் காரணன் கண்ணனே என்று கூறி, அனைவரும் அவனைப் பிரார்த்தனை செய்யப் பணிக்கிறார் ஸ்ரீஆண்டாள் நாச்சியார்!
***
அடுத்து, மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாமை 4வது பாடல்...
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்:
முத்துப் போன்ற புன்னகை உடையவளே ! இன்னுமா விடியவில்லை ? என்று அங்கே மஞ்சத்தில் படுத்திருப்பவளை நோக்கிக் கேட்கிறார்கள் தோழியர்.
அதற்கு, அங்கே படுத்திருப்பவள், அழகிய கிளி போன்ற சொற்களைப் பேசும் தோழியர் எல்லாரும் வந்துவிட்டார்களா ? என்று எழுந்தும் எழாதது போல் கேட்கிறாள்.
அதற்உ தோழியர், நாங்கள் உள்ளதையே எண்ணித்தான் சொல்லுகின்றோம். கண் துயின்று வீணாகக் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகும் போற்றும் ஒரே மருந்தை, வேதத்தால் மேன்மையாக உணரப்படும் பொருளை, காண இனிய சிவபெருமானை நெக்குருகக் கசிந்து பாட வந்துள்ள நாங்கள் இதெல்லாம் செய்ய மாட்டோம். வேண்டுமானால் நீயே வந்து எண்ணிக்கொள். எண்ணிக்கை குறைந்தால் தூங்கிக்கொள் ! என்று விரக்தி மேலிட அவளிடம் பதிலுரைக்கின்றனர்.
