கிரில்ஸுடன் கர்நாடக காட்டுக்குள் செல்லும் ரஜினி... ’இப்ப வீரப்பன் மட்டும் இருந்திருக்கணும்’..!
மோடி ஆதரவாளராக நிலைநிறுத்தப்பட முயற்சிகள் நடைபெற்று வரும் வேளையில் இந்த நிகழ்ச்சியில் கிறில்ஸிடம் ரஜினி சொல்லப்போகும் ஃப்ளாஷ்பேக் எப்படி இருக்கும்?
பிரதமர் மோடியை தொடர்ந்து பேர் கிரில்ஸின் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்ள உள்ளது சில வாரங்களுக்கு தமிழகத்தின்பேசுபொருளாக இருக்கிறது.
இதற்கான படப்பிடிப்பு கர்நாடகா மாநிலம் பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடக்க உள்ளது. பியர் கிரில்ஸ் இயக்கும் இந்த நிகழ்ச்சிக்காக காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது.
ரஜினி இரு நிமிடங்கள் மீடியாக்களிடம் பேசினாலே ஒருவாரத்துக்கு பற்றி எரிகிறது. ஆனால் உலகம் முழுவதும் 120 நாடுகளில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் ரஜினி இரு தினங்கள் பங்கேற்க உள்ளதால் இந்த நிகழ்வு இப்போது ட்ரெண்டாக உள்ளது.
மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவரது நகைச்சுவை உணர்வு, வீரம், உடற்பயிற்சி, சிறு வயதில் புலிக்குட்டியை முரத்தால் அடித்து விரட்டியது என பல வியக்க வைக்கும் விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதே போல அவர் தன் வாழ்க்கையில் நடந்ததாக சொன்ன சில ஃப்ளாஷ்பேக்குகள் விவாதப் பொருளாகின.
அதேபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இந்தியாவை சேர்ந்த இரண்டாவது நபர் ரஜினி. மோடி ஆதரவாளராக நிலைநிறுத்தப்பட முயற்சிகள் நடைபெற்று வரும் வேளையில் இந்த நிகழ்ச்சியில் கிறில்ஸிடம் ரஜினி சொல்லப்போகும் ஃப்ளாஷ்பேக் எப்படி இருக்கும்? என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
அட அவர்கள் மட்டுமா? அவரது எதிர்ப்பாளர்கள் இன்னும் பேராவலுடன் காத்திருக்கிறார்கள். பின்னே மீம்ஸ் போட கண்டெண்ட் கொடுப்பாரே ரஜினி. அட இப்போதே சமூகவலைதளங்களில் ஆரம்பித்து விட்டார்கள். '’வீரப்பன் மட்டும் இருந்துருக்கனும் இப்ப..?’’என்கிற ரீதியில் கருத்துக்களை சொல்ல ஆரம்பித்து விட்டனர்.