56,000 ஹெல்மெட்கள் வழங்கி 30 உயிர்களைக் காப்பாற்றிய இந்தியாவின் ஹெல்மெட் மேன்; யார் இவர்?
சாலை பாதுகாப்பு என்ற பெயரில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு தனது சொந்த பணத்தில் ஹெல்மெட் வாங்கிக் கொடுக்கிறார் ராகவேந்திர சிங். இப்படி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 36 வயதாகும் இவர் 56,000 ஹெல்மெட்களை வழங்கியுள்ளார்.
இவரது நண்பர் கிருஷன் குமார் தாகூர் சாலை விபத்தில் கிரேட்டர் நொய்டாவில் இறந்துவிட்டார். இதையடுத்து, சாலை பாதுகாப்பு என்ற சேவையை துவக்கியுள்ளார். இவரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூட பாராட்டி இருக்கிறார்.
இவரது நண்பர் இறந்தது முதல் அந்த வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் அன்றுமுதல் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இந்த சேவையை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில் 30 பேரை விபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்.
கிரேட்டர் நொய்டாவில் வாடகை வீட்டில் தான் குடியிருந்து வருகிறார். இவரது சேவைக்காக கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் தனது வீட்டை விற்று விட்டார். தனது மனைவியின் நகையை அடமானம் வைத்து ஹெல்மெட் வாங்கிக் கொடுத்துள்ளார்.
தனது சேவைக்காக தனது மகனைக் கூட அரசு பள்ளியில் படிக்க வைத்து வருகிறார். பீகாரில் இருக்கும் தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்று, தொடர்ந்து இந்த சேவையை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளாராம். ''என்னை பையத்தியக்காரன் என்று கூட அழையுங்கள். ஆனால், நான் ஹெல்மெட் வாங்குவதை நிறுத்த மாட்டேன்'' என்று கூறுகிறார் ராகவேந்திரா.
என்னுடைய சேவையை நடிகர்கள் உள்பட பலர் பாராட்டி இருக்கின்றனர். ஆனால், உதவியது கிடையாது. எனது மனைவி தனலட்சுமி சிங் மற்றும் மகன் இருவரும் தான் தற்போது எனக்கு உதவி வருகின்றனர். எனது சேவையில் யாராவது இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார்.
பல நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக இருந்து வரும் இவர் கார் ஓட்டும்போதும் ஹெல்மெட் அணிந்து கொள்கிறார். இதுவும் ஒரு விழிப்புணர்வு என்கிறார்.