குறட்டை வருவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன என்றும், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் கீழே தெரிந்துகொள்ளலாம்.

பலரின் வாழ்வில் குறட்டை என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக உள்ளது. வயதில் மூத்தவர்களுக்கு மட்டும் குறட்டைப் பிரச்சனை இருந்தது. ஆனால், தற்போது வயது வரம்பு இல்லாமல் எல்லோருக்கும் வர கூடிய நோயாக மாறிவிட்டது. அதாவது படுத்த உடனே நல்லா குறட்டைவிட்டு தூங்குவதால் அடுத்த நாள் ரொம்ப சோர்வாக இருப்பதாக பலர் கூறுகின்றனர்.

நன்றாக குறட்டை விட்டு தூங்கினால் நிச்சயமாக அடுத்த நாள் சோர்வை உண்டாக்கும், அது மிகப்பெரிய பிரச்சனை தான், பலர் குறட்டை விட்டு தூங்கினால் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக தவறாக நினைக்கின்றனர். குறட்டை விடுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.

குறட்டை ஏன் ஏற்படுகிறது ?

குறட்டை வருவது, தொண்டையில் அதிகம் சதை வளர்ந்து சுவாச குழாய்க்கு செல்லும் ஆக்சிஜனில் தடை ஏற்படுவதாலும். தூங்கும்போது, மூளையால் சுவாசிப்பதைக் கட்டுபடுத்த முடியாமல் போவதாலும் நடக்கலாம். ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்னைகள் இருந்தாலும், மூக்குப்பகுதி வளைந்து இருந்தாலும், தொண்டை பகுதியில் திசுக்கள் தாபிதம் அடைந்து இருந்தாலும் குறட்டை என்பது ஏற்படலாம். இதுபோன்ற குறட்டைகளை மருத்துவ முறை மூலம் தீர்த்துக்கொள்ள முடியும், அதே போல புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், மது பழக்கம் உள்ளவர்களுக்கு நிச்சயமாக குறட்டை வரும், அதே போல உடற்பருமனாக இருந்தாலும் குறட்டை என்பது வரும், இதனை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் உள்ளன.

குறட்டையை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? 

சித்த மருத்துவத்தில் இருக்கும் சவுரிபல தைலம் என்று சொல்வர். சவுரி பலத்தை நல்லெண்ணெயில் விட்டு நன்கு காய்ச்சி தயாரிக்கப்படும் தைலத்தை எண்ணெய் குளியல் போன்று பயன்படுத்த வேண்டும். உணவாக தூதுவளை ரசம், தூதுவளை சட்னி போன்றவற்றை எடுத்து கொள்ளலாம், கற்பூரவல்லியை சுரசம் செய்து சாப்பிடலாம், அதாவது கற்பூரவல்லியை இடித்து சாறு பிழிந்து சுண்டசெய்து சமஅளவு தேன் சேர்த்து அதனை எடுத்து வரலாம், உள்நாக்கு பகுதியிலும் அதனை தடவலாம், துளசி இலை சாறையும் குடித்து வந்தால் நல்ல பலன் தரும். மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி நல்ல பலனைத் தரும். 

தேவையில்லாத மருந்துகளை சாப்பிடுவதால் குறட்டை வரலாம், மன அழுத்தம் காரணமாக வரலாம், உடற்பருமனை குறைத்து, இயற்கை மருந்துகளை எடுத்து ஆரோக்கியமாக இருந்தோம் என்றால் குறட்டை விடுவதை தவிர்க்கலாம்.

குறட்டை வருவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன?

தொண்டை வறண்டு போகலாம், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம், தொண்டையில் புண் ஏற்படலாம், இதெல்லாம் குறட்டையினால் வரக்கூடிய பிரச்சனைகள். ஆரம்ப நிலையிலேயே இது போன்ற பிரச்சனைகள் வருவதை தீர்ப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

குறட்டை விடுவது பக்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பிரச்சனை இல்லை, உடலுக்குள்ளும் பிரச்சனையை ஏற்படுத்தும், நீங்கள் குறட்டை விடுபவர்களாக இருந்தால் இந்த வழிமுறைகளையெல்லாம் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை இன்றே வாழ துவங்குங்கள்.