நாம் இந்த 2022 ஆம் ஆண்டினை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, தேவையற்ற நெகட்டிவ் செயல்களை கைவிடுவது அவசியமாகிறது.
2020 இல் துவங்கிய கொரோனா என்ற கொடிய வைரஸ், உலகில் சுமார் 18 லட்சம் பேரை கொன்று குவித்தது. இந்தியாவை பொருத்த வரை உயிரிழப்புகள் குறைக்கவாகவே பதிவு செய்யப்பட்டன. ஆனால், 2021 இல் துவங்கிய இரண்டாம் அலை யாரும் எதிர்பாராத விதமாக இந்தியாவில் உயிரிழப்புகள் எண்ணிக்கையை அதிகரித்தது. உலக அளவில் சுமார் 35 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக கொரோனா வேக்சின் பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருவதால், உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தது. அனைத்து இடங்களிலும், திரையரங்கு முதல் வழிபாட்டு தளங்கள் வரை திறக்கப்பட்டு மக்கள் அனைவரும் சென்று வர வழிவகை செய்தது. பெரும்பாலானோர் வெளி நாடுகளுக்கு சுற்று பயணமும் மேற்கொண்டனர். சற்று நிம்மதி பெரும்மூச்சு விடுவதற்குள் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், இயல்பு நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றிப்போட்டது. ஒமைக்ரான் பரவல் மின்னல் வேகத்தில்அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு நாடுகளிலும் தினசரி கொரோனா பாதிப்பு படுவேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் வைரஸ் பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகர பகுதிகளில் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் தாக்கம், தனிமை, சோகம், வேலையிழப்பு, மனச்சோர்வு, மற்றும் மனதளவிலான பிரச்சனைகள் உள்ளிட்ட தவிர்க்க முடியாத நெகடிவ் சிந்தனைகளை நம் அனைவருக்கும் வழங்கியுள்ளது.
எனவே, இந்த தொடர்ச்சியான மன அழுத்தமானது, நமது மூளையளவில் பெரிய மாறுதல்களை உண்டாக்குகின்றன. அதனால் நாம் பல சுவாரஸ்யமான தகவல்களை கூட எந்த உணர்வுமின்றி அணுகுவது இயல்பாகிவிட்டது. எனவே, நாம் இந்த 2022 ஆம் ஆண்டினை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, தேவையற்ற நெகட்டிவ் செயல்களை கைவிடுவது அவசியமாகிறது. ஆரம்பகட்டத்தில் இருந்தே, நாம் அதற்காக நம்மை நாமே கட்டாயப்படுத்தி மகிழ்ச்சியூட்டும் செயல்களில் செலவிட வேண்டும். அதற்கான சில எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உடற்பயிற்சி நமது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இது, இருதய நோய்களை குறைத்து இருதயத்தின் ஆயுளை அதிகரித்து மன அழுத்தத்தினை குறைக்க உதவும். உங்களது மூளையை புத்துணர்ச்சி அடைய செய்வதற்கு நீங்கள் காலை எழுந்தவுடன் மூச்சுப்பயிற்சி, யோக போன்ற வீட்டில் இருந்து தொடரும் உடற்பயிற்சியினை மேற்கொள்வது சிறந்தது.

ஊட்டச்சத்துள்ள உணவுகள் நமது மூளையின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமாகும். ஊட்டச்சத்து குறைவாக உள்ள உணவுப்பொருட்களை நீண்ட காலத்திற்கு எடுத்துக்கொள்வதால் மூளை செல்கள் பாதிக்கப்படுவதாகவும், ஊட்டசத்து அதிகளவுள்ள உணவு பழக்கவழக்கங்கள் மூளையின் செயல்திறனை மேம்படுத்துவதாவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
புத்தகம் படிப்பது, உறவுகளுடன் நெருங்கி பழகுவது, இசை உள்ளிட்ட புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதன் மூலம், மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது மூளையை புத்துணர்ச்சி அடைய செய்து நமது உடல் நலனை பாதுகாக்கிறது.
நமது தூக்கத்தின் போது மூளையானது மறுசீரமைப்பு, மீள்நிரப்பு செய்வதால் தேவைற்ற கழிவு பொருட்களை மூளையின் செயல்திறன் மூலம், வெளியேற்றுகின்றது. அதுமட்டுமின்றி, நம்முடைய நீண்ட கால நினைவாற்றலுக்கு தூக்கம் இன்றியமையாததாகின்றது.

நல்ல தூக்கத்தின் மூலம் நமது உடல் சோர்வு, மன சோர்வு அனைத்தும் களையப்படுகின்றன. பொதுவாக தூக்க குறைபாடு, நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை பெருமளவு பாதிக்கிறது. எனவே, ஒவ்வொருவருக்கும் தினமும் 6 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியமாகிறது.
இருப்பினும், நாம் சில சமயங்களில் அதிகப்படியான மன உளைச்சலை உணரும்பட்சத்தில், அதற்கான மருத்துவ ஆலோசகரை நாடுவது அவசியமாகும்.
