உலகளவில் காலநிலை மாற்றம் கர்ப்பத்தை மிகவும் ஆபத்தானதாக ஆக்குகிறது. ஆபத்தான வெப்ப நாட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இது குறைப்பிரசவம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதைக் குறைப்பது அவசியம்.

உலகின் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் காலநிலை மாற்றம் கர்ப்பத்தை மிகவும் ஆபத்தானதாக ஆக்குகிறது. 2020 முதல் 2024 வரை, உலகெங்கிலும் உள்ள கிட்டத்தட்ட 90% நாடுகளிலும், 63% நகரங்களிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தான வெப்பமான நாட்கள் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது. இந்த உயர் வெப்பநிலை நாட்களின் தாக்கத்தால் குறைப்பிரசவங்கள், தாய்மார்கள் குழந்தைகள் இருவருக்கும் கடுமையான உடல்நல கோளாறுகள் ஏற்படகூடும் என்று ஆய்வு கூறுகிறது.

காலநிலை மாற்றம் நமது அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி ஆராயும் ஒரு இலாப நோக்கற்ற குழுவான கிளைமேட் சென்ட்ரல் இந்த ஆய்வை மேற்கொண்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தான வெப்ப நாட்களின் எண்ணிக்கையில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் காட்டும் முதல் ஆய்வு இதுவாகும்.

கர்ப்ப காலத்தில் வெப்ப ஆபத்து நாள் என்றால் என்ன?

கர்ப்பகால வெப்ப ஆபத்து நாள் என்பது, அந்தப் பகுதியில் கடந்த கால வெப்பநிலையை விட 95% அதிக வெப்பநிலை இருக்கும் நாளாகும். இந்த நாட்கள் சங்கடமானவை மட்டுமல்ல - அவை குறைப்பிரசவ அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும், இது குழந்தைகளுக்கு நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அவை உயர் இரத்த அழுத்தம், கர்ப்பகால நீரிழிவு நோய், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், குழந்தை இறந்து பிரசவம் மற்றும் பிற கடுமையான கர்ப்ப சிக்கல்களின் அபாயத்தையும் அதிகரிக்கின்றன.

ஆய்வில் கண்டறியப்பட்டவை

ஆய்வில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும், காலநிலை மாற்றம் காரணமாக, குறிப்பாக நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவை எரிப்பதால், கர்ப்பகால வெப்ப ஆபத்து நாட்கள் அதிகரித்துள்ளன.

247 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 222 இல், காலநிலை மாற்றம் கடந்த 5 ஆண்டுகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தான வெப்ப நாட்களின் எண்ணிக்கையை குறைந்தது இரு மடங்காக அதிகரித்துள்ளது.

78 நாடுகளில், காலநிலை மாற்றம் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக ஆபத்தான வெப்ப நாட்களைச் சேர்த்துள்ளது.

சில இடங்களில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆபத்தான வெப்பமான ஒவ்வொரு நாளும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டது. காலநிலை மாற்றம் ஏற்படாமல் இருந்திருந்தால் இந்த நாடுகளில் வெப்ப அபாய நாட்கள் இருந்திருக்காது.

கரீபியன், தென் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, பசிபிக் தீவுகள் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகளில் மிகப்பெரிய அதிகரிப்புகள் காணப்பட்டன - காலநிலை நெருக்கடிக்கு மிகக் குறைந்த பங்களிப்பை அளித்த ஆனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இடங்கள்.

முக்கியத்துவம் என்ன?

உலகளவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தற்போது அதிக வெப்பம் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாகும். வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, கர்ப்பிணிப் பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்கும். மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைப்புகள் ஏற்கனவே பலவீனமாக உள்ள நாடுகளில் இந்தப் பிரச்சினை மோசமாக உள்ளது.

ஒரு நாள் மிகவும் வெப்பமாக இருந்தாலும் கூட கர்ப்ப காலத்தில் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். புதைபடிவ எரிபொருள் வெளியேற்றத்தைக் குறைக்க இப்போதே நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பிரச்சினை இன்னும் மோசமாகும்.

ஆய்வு நடந்தது எப்படி?

இந்த ஆய்வு இரண்டு முக்கிய கருவிகளைப் பயன்படுத்தியது:

கர்ப்ப காலத்தில் வெப்ப ஆபத்து நாட்கள்: ஒவ்வொரு இடத்திலும் எத்தனை நாட்கள் 95% அளவை விட அதிக வெப்பநிலை கொண்டிருந்தது என்பதை ஆய்வாளர்கள் கணக்கிட்டனர். இவை குறைப்பிரசவங்களுடன் தொடர்புடைய நாட்கள்.

காலநிலை மாற்றக் குறியீடு (CSI): காலநிலை மாற்றத்தால் கர்ப்ப கால வெப்ப ஆபத்து நாட்கள் எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதைக் கண்டறிவதற்கான கருவி இது. இது, வெப்பமயமாதல் இல்லாமல் உலகம் எப்படி இருக்கும் என்பது பற்றிய தற்போதைய தரவுகளுடன் ஒப்பிடப்பட்டது.

காலநிலை நெருக்கடி குறித்த நிபுணர்கள்

"ஒரு நாள் அதிக வெப்பம் கூட கர்ப்பத்தை மிகவும் ஆபத்தானதாக்கும்" என்று கிளைமேட் சென்ட்ரலைச் சேர்ந்த டாக்டர் கிறிஸ்டினா டால் கூறுகிறார்.

"இது ஒரு நெருக்கடி. புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது கிரகத்திற்கு மட்டுமல்ல - தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது," என்று மகளிர் சுகாதார நிபுணர் டாக்டர் புரூஸ் பெக்கர் தெரிவிக்கிறார்.