சுத்தமான காற்றை சுவாசிக்கணுமா..? 15 நிமிடத்திற்கு விலை ரூ.300..!
காற்று மாசு அதிகரித்துவரும் நிலையில், மாசில்லாத காற்றை 300 ரூபாய்க்கு டெல்லியை சேர்ந்த மதுபான பார் ஒன்று விற்பனை செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துவரும் நிலையில், மாசில்லாத காற்றை 300 ரூபாய்க்கு டெல்லியை சேர்ந்த மதுபான பார் ஒன்று விற்பனை செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துவருவது மட்டுமல்லாமல் அலர்ஜி மற்றும் சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். காற்றுமாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இந்நிலையில், டெல்லியில் உள்ள Oxy Pure என்ற பாரில் சுத்தமான ஆக்ஸிஜனை 15 நிமிடங்கள் சுவாசிக்க 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது.
அந்த பாரில், காற்றை சுத்தம் செய்யும் Oxygen Concentrator வைக்கப்பட்டுள்ளது எனவும் அதனால் அங்கு வருபவர்கள் 80% முதல் 90% வரை சுத்தமான காற்றை சுவாசிக்கலாம் எனவும் Oxy Pure நிர்வாகம் தெரிவித்துள்ளது.
7 விதமான வாசனைகளில் கிடைக்கும் இந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் மன அழுத்தம் குறையும் எனவும் தோல் பளபளப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சி டெல்லி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.