அரைக் கிலோ வெங்காயம் கொடுத்தால் பிரியாணி இலவசம்... அதிரடி அறிவிப்பு..!
அரைக்கிலோ வெங்காயம் கொடுத்தால் ஒரு பிரியாணி வழங்கப்படும் என சென்னையில் உள்ள ஒரு உணவகத்தினர் அறிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் மவுசு அதிகமாகிக் கொண்டே வருகிறது. வெங்காயம் தட்டுப்பாடு நிலவுவதை வெளிக்காட்டும் வகையில் பல அறிவிப்புகளை வியாபார நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இன்னும் சிலபேர் அதையே மாலையாக அணிவித்து வருகிறார்கள். சிலபேர் தங்கத்தை பாதுகாக்கிற லாக்கரில் வைத்து சோசியல் மீடியாக்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை கந்தன்சாவடி எம்.ஜி.ஆர் சாலையில் இயங்கிக் கொண்டிருக்கிற ஏ.பி ஃபுட் பாரடைஸ் என்கிற ரெஸ்டாரெண்டில் அரைகிலோ வெங்காயம் கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். காரணம் கேட்டால், தங்கள் ஹோட்டலில் சமைப்பதற்கு வெங்காயத் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
ஆகையால் வெங்காயத் தேவையை ஈடுசெய்ய மக்களிடம் இருந்தே வெங்காயத்தை வாங்கிக் கொள்கிறோம். மன்னர்கள் காலத்தில் நமக்கு ஒரு பொருள் வேண்டும் என்றால் நம்மிடம் இருக்கிற ஒரு பொருளை கொடுத்து நமக்கு தேவையான ஒரு பொருளை வாங்கிக் கொள்வது வழக்கம். அந்த பண்டமாற்று முறையை தான் இப்போது கடைபிடிக்கிறோம் என்கிறது அந்த உணவு விடுதி நிர்வாகம்.
இனிவரும் காலங்களில் எந்தப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் அந்தப்பொருளை வாங்கிக் கொண்டு பிரியாணியை இலவசமாக கொடுக்க உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.