இம்யூனிட்டியை அதிகரிக்கும், பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு இணையான மற்றுமொரு மகத்துவம், பனங்கிழங்கில் உள்ளது. 

கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு, ஆபத்துகளுக்கு மத்தியில் கடந்த நான்கு நாட்களாக பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. வழக்கமாக பொங்கல் திருநாள் என்றவுடன் நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது, பொங்கல், கரும்பு, ஜல்லிக்கட்டு போன்றவையாகும். இந்த இந்த கரோனா கால கட்டத்தை எதிர்கொள்ள மேற்கத்திய உணவு பழக்கவழக்கங்களை கைவிட்டு, இம்யூனிட்டியை அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவு வகைகளை உண்பது அவசியம். பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு இணையான மற்றுமொரு மகத்துவம் தமிழர்களின் பராம்பரிய உணவான பனங்கிழங்காகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் பெண்களின் கர்ப்பப்பை பிரச்சனையை சரி செய்வதற்கு சிறந்த மருந்தாக அமைகிறது. தமிழர்களின் முக்கிய அடையாளம் அவர்களின் பாரம்பரியம் தான். இந்த பாரம்பரியத்தோடு உடல் நலத்தை பேணுவதிலும் அதிக அக்கறைக் கொண்டவர்கள் தான் நம் தமிழ் மக்கள். பொதுவாக ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு உணவு வகைளை படைத்தும் மகிழும் தமிழர்களின் பெருமையை அடுக்கிக்கொண்டே போகலாம். அதில் ஒன்று தான் தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையொட்டி அதிகளவில் கிடைக்கும் பனங்கிழங்கு ஆகும்.

தமிழ்நாட்டின் மரமான பனைமரத்தில் விளையக்கூடிய பனம்பழம், பனங்கிழங்கு,பதநீர், நுங்கு, கருப்பட்டி உள்ளிட்ட அனைத்தும் பல்வேறு சத்துக்களைக் கொண்டுள்ளது. அதிலும் பனம்பழத்தில் உள்ள பனை விதைகளை மண்ணில் புதைத்த பின்னர் குறிப்பிட்ட நாள்கள் கழித்து தமிழர் பண்டிகையான பொங்கலை முன்னிட்டு அறுவடை செய்தால் கிடைக்கும் பனங்கிழங்கில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளது. அவை என்ன என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பனங்கிழங்கில் உள்ள மருத்துவக்குணங்கள்:

பனங்கிழங்கை சாப்பிடும் போது கண் எரிச்சல் மற்றும் வாய் புண் போன்றவற்றிக்கு தீர்வாக அமைகிறது. மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பனங்கிழங்கை சாப்பிடுவதால் அனைவரின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வைப்பதுடன் உடலின் ஹார்மோன் சுரப்பிகளையும் சரியாக இயங்க வைக்கிறது.

கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனைமரம் அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் நிறைந்துள்ளது போல், அதில் கிடைக்கும் பொருள்களைச் சாப்பிட்டாலும் நோய் நொடியின்றி அதிக காலம் வாழ முடியும்.

பனங்கிழங்கில் அதிகளவு கிடைக்கும் நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கலை சரி செய்ய உதவுகிறது.

மேலும், பனங்கிழங்கில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகைக்கு தீர்வாகவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவியாக உள்ளது.

பனங்கிழங்கை வேக வைத்து சிறு,சிறு துண்டாக நறுக்கி காயவைத்த பின்பு, அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் நம் உடலுக்குத் தேவையான அனைத்து இரும்புச் சத்துக்களும் நமக்கு கிடைக்கிறது.

இதேப்போன்று, பனங்கிழங்கு மாவில் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுப்பெறும். மேலும், பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனை ஏற்படாமலும் பாதுகாக்கவும் உறுதுணையாக உள்ளது.

வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்சனை உள்ளவர்கள், பனங்கிழங்கை இடித்து வைத்து உணவில் சேர்த்துவந்தால் நல்ல பலனளிக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பனங்கிழங்கை சாப்பிட்டும் போது உடலின் இன்சுலின் அதிகரிக்கும் எனவும் இதனால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும், உடல் எடை அதிகமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் பனங்கிழங்கு சாப்பிடலாம்.

எனவே, இந்த பொங்கல் திருநாள் மட்டுமின்றி இனி வரும் நாட்களிலும், தமிழரின் பாரம்பரிய உணவான பனங்கிழங்கை உண்டு மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழலாம்.