பெற்றோர்களே! உங்கள் குழந்தைக்கு டயப்பர் மாத்தியாச்சா...? குழந்தை பராமரிப்பில் நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய
இன்றைய இளம் பெற்றோர்கள் குழந்தை பராமரிப்பில், தேவையான விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்வது அவசியம்.
இன்றைய இளம் பெற்றோர்கள் பெரும்பாலும், பிஸியான வாழ்கை முறையில் இருப்பதால், தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்கு எளிமையான வழிமுறைகளை தேர்வு செய்கின்றனர். இருப்பினும், ஒரு சில சமயங்களில் அவை குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என்பதில் அதிக கவனம் தேவை.
மீதமுள்ள உணவை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது:
உங்கள் குழந்தைக்கு கொடுக்கும், செரலாக் போன்ற பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை ஊட்டுவதாக இருந்தால், ஒருமுறை கலக்கிய உணவை முழுவதுமாக குழந்தை உட்கொள்ளாதபோது மீதமுள்ள உணவை பிரிட்ஜில் வைத்து அதனை மீண்டும் குழந்தைக்கு கொடுப்பது. ஒருமுறை கலக்கிய உணவில் மீதம் எவ்வளவு இருந்தாலும் அதை அடுத்தமுறை குழந்தைக்குக் கொடுக்கக்கூடாது.என்பதை, உணர்ந்து செயல்படுங்கள்.
சுடுதண்ணீருக்கும், வெந்நீருக்கும் என்ன வித்தியாசம்?
இன்றைய இளம் பெற்றோர்கள், சிலர் தங்களுக்கு இருக்கும் பிஸியான வாழ்வில் குழந்தைகளை பராமரிப்பதில் கவனம் இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் நீர் எவ்வகை சுடுதண்ணீரா? வெந்நீரா? வாய்க்கு இதமான சூட்டில் நீரைச் சுடவைத்து கொடுப்பது சுடுநீர். இதனால் சூடு மட்டுமே ஏறுமே தவிர, எந்தப் பயனும் இல்லை. வெந்நீர் என்பது வெம்மையான அதாவது வெந்து 'தளபுள தளபுள'வெனக் கொதி வந்த நீர். இப்படிக் கொதித்த நீரை ஆறவைத்து வெதுவெதுப்பான சூட்டில் குழந்தைக்குக் கொடுப்பதே சிறந்தது.
குழந்தையின் பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்:
குழந்தை உபயோகிக்கும் பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். ஏனெனில், அவர்களுக்கு பல் முளைக்கும் சமயத்தில் எந்த பொருட்களை பார்த்தாலும், கடிக்க சொல்லும். எனவே, குழந்தை உபயோகிக்கும் பொருட்களில் கவனம் தேவை. அதேபோன்று, குழந்தையின் பாட்டில்களை சுத்தம்செய்ய தனி நார், பிரஷ் பயன்படுத்துங்கள். வீட்டிலுள்ள இதர பொருள்களைச் சுத்தம் செய்ய இந்த நாரைப் பயன்படுத்த வேண்டாம். மேலும், குழந்தையின் பாட்டில் டம்ளர் ஸ்பூன் போன்றவற்றைக் கழுவி காய வைத்தாலும் பயன்படுத்தும் முன் ஒருமுறை வெந்நீரால் கழுவுவது பாதுகாப்பானது.
தொட்டில் துணி:
வாரம் ஒருமுறையேனும் தொட்டில் கட்டியிருக்கிற துணியை மாற்றுங்கள். தொட்டில் துணி இல்லாத சமயங்களில் வெளிர் நிறங்களிலுள்ள புடவையையோ வெள்ளை வேட்டிகளையோ பயன்படுத்துங்கள். மழைக்காலங்களில் தொட்டில்துணியில் வென் பூஞ்சைகள் படிய வாய்ப்பிருக்கிறது. அதனால் ஒவ்வாமையும் தோல் தடிப்பும் ஏற்படலாம். எனவே துணியை அடிக்கடி மாற்றுங்கள். குழந்தையின் உறக்கம் மகிழ்வானதாக அமையட்டும்.
நாளடைவில் அக்கறை குறைவது:
இன்றைய இளம் பெற்றோர்கள் பலரிடமும் இருக்கிற பழக்கம், வெளியே டயபர் போட்டு தூக்கிச்சென்று வீடு வந்ததும் டயபரைக் கழட்டி, டயாபரின் கனம் கூடாத நேரங்களில் அதாவது ஓரிரு முறை மட்டுமே குழந்தை ஈரப்படுத்தியிருப்பதை வெயிலில் உலர வைத்து அதை மீண்டும் பயன்படுத்துகிற பெற்றோரைப் பார்க்கையில் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருமுறை குழந்தையின் உடலில் பயன்படுத்திய டயபரை அடுத்தமுறை நிச்சயமாகப் பயன்படுத்தக்கூடாது.
துவைத்துப் பயன்படுத்துகிற துணி டயபரை மட்டுமே பலமுறை பயன்படுத்தலாம். அதுவும் துவைத்து, காய வைத்து நன்கு உலர்ந்தபிறகு மட்டுமே என்பதை மறக்க வேண்டாம். ஒரு துணி டயபருக்கு இரண்டு மூன்று உட்செருகிகளை (inserts) வாங்கி வைத்துக்கொண்டு உட்துணியை மட்டும் மாற்றுவதும் தவறு. எப்படியும் வெளித்துணியிலும் ஈரம் கசிந்திருக்கும். குழந்தையின் சருமத்தில் ஈரம் படிந்திருக்கும்.
க்ளிங் பேப்பர் வைத்திருக்கிறீர்களா?
காய்ச்சல், சளி, வயிற்றுவலி, இருமல் என எதற்குரிய மருந்துகள் வாங்கினாலும் பயன்படுத்திய பிறகு அவற்றை க்ளிங் ஃபில்ம் வகை பேப்பர் வாங்கி காற்று புகாத வகையில் கீழே சிந்தாத வகையில் பத்திரப்படுத்தி வையுங்கள். வெளியே இரண்டு மூன்று நாள்கள் தங்குவதாக இருந்தால் முதலில் எடுத்துவைக்க வேண்டியவை மருந்து பாட்டில்கள் என்பதை மறக்க வேண்டாம். எந்த மருந்து எதற்கானது என்பதையும் எழுதி வையுங்கள். புது மருந்தைப் பயன்படுத்தும்போது ஒவ்வாமை ஏதும் ஏற்படுகிறதா என்பதைக் கவனியுங்கள்.
இன்றைய இளம் பெற்றோர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, குழந்தையை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வாழ்த்துக்கள்!