ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணி ஹர்பஜனுக்கு மாற்று வீரராக இவரை எடுக்கலாம்..! முன்னாள் வீரர் தரமான ஆலோசனை
சிஎஸ்கே அணி, ஹர்பஜன் சிங்கிற்கு மாற்று வீரராக, உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த அனுபவம் கொண்ட ஸ்பின் ஆல்ரவுண்டரான ஜலஜ் சக்ஸேனாவை எடுக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ளது. அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு மட்டும் இந்த சீசனில் தொடர்ந்து விரும்பத்தகாத சம்பவங்களாக நடந்துகொண்டிருக்கின்றன. சிஎஸ்கே அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாது, ரெய்னா அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால் தொடரிலிருந்து விலகி இந்தியா திரும்பியது, அணியின் சீனியர் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங் இந்த சீசனிலிருந்து விலகியது என சிஎஸ்கே அணிக்கு தொடர்ந்து அடுத்தடுத்த அடிகள் விழுந்துகொண்டிருக்கின்றன.
ஆனாலும் தோனி என்ற வலுவான தலைமையின் கீழ் எந்த சவாலையும் சந்திக்கவல்ல வலுவான அணி உள்ளதால், சிஎஸ்கே எதற்கும் அசராமல் நம்பிக்கையுடன் உள்ளது. 2018 மற்றும் 2019 ஆகிய 2 சீசன்களிலுமே சிஎஸ்கே அணிக்கு பக்கபலமாக இருந்தவர் ஹர்பஜன் சிங். கடந்த 2 சீசன்களாக சிஎஸ்கே அணியில் ஆடிவரும் ஹர்பஜன் சிங், தனது அனுபவமான ஸ்பின் பவுலிங்கின் மூலம் முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். பவர்ப்ளேயில் அருமையாக வீசி, கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட அதிரடி வீரர்களை ஆரம்பத்திலேயே வீழ்த்தி அணிக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங்.
ரெய்னா ஆடுவதே சந்தேகமாகவுள்ள நிலையில், ஹர்பஜன் சிங்கும் விலகியிருப்பது சிஎஸ்கேவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இம்ரான் தாஹிர், பியூஷ் சாவ்லா, ஜடேஜா, மிட்செல் சாண்ட்னெர், கரன் ஷர்மா என சிஎஸ்கே அணியில் பல ஸ்பின்னர்கள் இருப்பதால் பிரச்னையில்லை என்றாலும், ஹர்பஜன் சிங் ஆடாதது சற்று பின்னடைவுதான்.
இந்நிலையில், ஹர்பஜன் சிங்கிற்கு மாற்று வீரராக உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அனுபவம் கொண்ட ஸ்பின் ஆல்ரவுண்டரான ஜலஜ் சக்ஸேனாவை சிஎஸ்கே அணி எடுக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான தீப்தாஸ் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள தீப்தாஸ் குப்தா, ஹர்பஜன் சிங்கிற்கு சரியான மாற்றாக ஜலஜ் சக்ஸேனா கண்டிப்பாக இருப்பார். அருமையான ஆல்ரவுண்டரான அவர், சிஎஸ்கே அணியில் இடம்பெற தகுதியான வீரர். சிவப்பு பந்து கிரிக்கெட்டில் மட்டுமல்லாது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் சிறந்த அனுபவம் கொண்டவர் ஜலஜ் சக்ஸேனா என்று தீப்தாஸ் குப்தா தெரிவித்தார்.
ஜலஜ் சக்ஸேனா முதல் தர கிரிக்கெட், லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் உள்நாட்டு டி20 போட்டிகள் என உள்நாட்டு கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் கொண்டவர். இதுவரை ஜலஜ் சக்ஸேனா 54 டி20 போட்டிகளில் ஆடி 49 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 633 ரன்களையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சக்ஸேனா குறித்து தொடர்ந்து பேசிய தீப்தாஸ் குப்தா, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் நடப்பதால், தொடரின் இரண்டாவது பாதியில் ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும். எனவே அந்த நேரத்தில் அனுபவமான ஸ்பின்னர் ஒருவர் தேவை. சக்ஸேனா கடந்த சீசனுக்கு பிறகு இன்னும் கிரிக்கெட் ஆடவில்லை தான் என்றாலும், அவரது அனுபவமான ஆஃப் ஸ்பின் கண்டிப்பாக சிஎஸ்கேவிற்கு உதவும் என்று தீப்தாஸ் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.