யாருக்கு தெரியும்? நாளைக்கு அவரேகூட அப்படி செய்வாரு.. ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அஷ்வின் தக்க பதிலடி
தன் மீதான விமர்சனத்துக்கு இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அஷ்வின்.
ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் கடும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய சம்பவம் என்றால், அது மன்கட் ரன் அவுட்டுதான். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார் அஷ்வின்.
அஷ்வின் அப்படி செய்தது கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டே அஷ்வின் செயல்பட்டதால் அதில் தவறு ஏதும் இல்லை என்று அஷ்வினுக்கு ஆதரவுக்குரல்கள் எழுந்த நிலையில், ஆட்டத்தின் ஸ்பிரிட்டை கெடுக்கும் விதமான செயல் என்ற எதிர்ப்புக்குரல்களும் வலுவாக இருந்தன.
அஷ்வினின் செயலை இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள அஷ்வின், ஆண்டர்சன் நான் செய்த ரன் அவுட்டை தவறு என்று சொல்கிறார். ஒவ்வொருவரின் பார்வையிலும் சரி - தவறு என்ற கருத்து இருக்கும். இன்று மன்கட் ரன் அவுட்டை தவறு என்று சொல்லும் ஆண்டர்சன், எதிர்காலத்தில் அவரே கூட அப்படி செய்யலாம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.