கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக தனது தந்தை அப்துல் கரீம் நாயக்(வயது88) மரணத்தின் இறுதிச் சடங்குக்கு கூட வராமல், முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக் புறக்கணித்துள்ளார்.
தற்போது மலேசியாவில் வசித்துவரும் ஜாகீர்நாயக், மும்பைக்கு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே அவர் வரவில்லை என அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வங்காளதேச தலைநகர் டாக்காவில் கடந்த ஜூலை 1-ம் தேதி விடுதியொன்றில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஈடுபட்ட தீவிரவாதிகள், மும்பையைச் சேர்ந்த மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுகளில் ஈர்க்கப்பட்டு தீவிரவாத பாதையைத் தேர்ந்தெடுத்ததாக தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, நாயக்கின், ‘பீஸ் டிவி’யை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலமாக ஒளிபரப்பவும் வங்கதேச அரசு தடை விதித்தது. தொடர்ந்து, ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாயக்கின் பிரச்சாரங்கள் தடை செய்யப்பட்டன. இந்தியாவிலும் ஜாகீர் நாயக்கின் பேச்சுக்கள் அடங்கிய டிவிடிக்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக உள் துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும், அவரின் இஸ்லாமிய ஆய்வக அமைப்பும், சட்டத்துக்கு புறம்பான நிறுவனம் என்ற சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது. இதனால், ஜாகீர் நாயக் இந்தியாவுக்கு வராமல் தொடர்ந்து மலேசியாவில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில், மும்பை கடற்ஓரப்பகுதியான ரத்தினகிரியில் வசித்து வந்த ஜாகீர் நாயக்கின் தந்தை டாக்டர் அப்துல் கரீம்(வயது 88) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். தந்தையின் மரணம் மதபோதகர் ஜாகீர் நாயக்குக்கு தெரிந்திருந்த நிலையிலும் தான் மும்பை வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் வராமல் தவிர்த்தார்.
மும்பையில் உள்ள நரியல்வாடி பகுதியில் நேற்று நடந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் டாக்டர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என 1,500 பேர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இறுதிச்சடங்குக்கு ஜாகீர்நாயக் எப்படியும் வருவார் எனக் கருதி, தேசிய புலனாய்வு அமைப்பினர், போலீசார், உளவுத்துறையினர் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தில் காத்திருந்தனர். ஆனால், கடைசி வரை ஜாகீர்நாயக் வரவில்லை.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ஜாகீர் நாயக் வருவார் என கிடைத்த தகவல் அடிப்படையில் இங்கு வந்து கண்காணிப்பில் ஈடுபட்டோம். ஆனால், அவர் வரவில்லை. இது குறித்து மேலதிகாரிகளிடம் தெரிவிப்போம். இதுவரை ஜாகீர்நாயக் மீது எந்தவிதமான முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யாத நிலையில் ஏன் வரவில்லை என்பது தெரியவில்லை'' எனத் தெரிவித்தனர்.
