அவரே பிரதமரா...? செல்லாது...செல்லாது... இறங்கி அடிக்கும் பாஜக முன்னாள் அமைச்சர்..!
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகத் தேர்வு செய்தால், கடைசியாக உள்ள தேர்தல் என்ற ஜனநாயக அமைப்பும் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும் என்று பாஜக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த சின்ஹா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி, வெளியுறவுத் துறை முக்கியமான பொறுப்புகளை வகித்தவர் யஷ்வந்த் சின்ஹா. கடந்த தேர்தலுக்கு பிறகு இவரை நரேந்திர மோடி பாஜகவிலிருந்து ஓரங்கட்டினார். இதனையடுத்து மோடிக்கு எதிராக திரும்பினார் சின்ஹா. தற்போது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார்.
யஷ்வந்த் சின்ஹா பேட்டியின் சாரம்சம்:
மோடி ஏன் மீண்டும் பிரதமாரக் கூடாது என்பதைக் கூற அதிகம் சிரமப்பட தேவையில்லை. இந்தியாவின் பல ஜனநாயக அமைப்புகளை மோடி சிதைத்துவிட்டார். இது ஒன்றே போதும். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட முடிகிறதா? உச்ச நீதிமன்றத்தில் உள்ள தலையீடுகளைப் பற்றி நீதிபதிகளே வெளிப்படையாகக் கூறியுள்ளனர். ரிசர்வ் வங்கி, சிபிஐ என சுயேட்சையான அமைப்புகள் எப்படி சிதைக்கப்பட்டுள்ளன என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த அமைப்புகள் சேதப்படுத்தப்பட்டதால், பிரதமர் என்ற தனிநபருக்கு அதிகாரம் சென்றுள்ளது.
மோடியை மீண்டும் பிரதமராக தேர்வு செய்தால், கடைசியாக உள்ள தேர்தல் என்ற ஜனநாயக அமைப்பையும் முழுமையாக அழித்துவிடுவார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாரம் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. இதற்கு மோடிதான் காரணம். இந்தப் பிரச்னையால் வளர்ச்சி குறைந்து வேலைவாய்ப்பும் அதிகரித்து விட்டது. ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு இந்தியப் பொருளாதாரத்தையே சீர்குலைத்து விட்டது. ஜிஎஸ்டியால் பாதிப்புகள் அதிகருத்துள்ளன. வெளியுறவுக் கொள்கையில் மிகப் பெரிய தோல்வி கிடைத்துள்ளது. உலகத் தலைவர்களை சந்தித்து கட்டிப் பிடித்தது மட்டுமே நடந்துள்ளது.
இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.