பெண்களுக்கு பாதுகாப்பான இடம் பாகிஸ்தான்; இந்தியாவில் இல்லை! அதிர்ச்சி சர்வே
லண்டன்: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத 10 நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச செய்தி நிறுவனமான தாம்ஸன் ராய்டர்ஸ் பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ள 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
193 ஐ.நா. உறுப்பினர்கள் உள்ளிட்ட 550 வல்லூநர்களிடம் ஆய்வு நடத்தி உள்ளது. அதில் 2018-ம் ஆண்டில் பெண்களுக்கு ஆபத்தான முதல் நாடாக இந்தியா உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அமில வீச்சு, பாலியல் வன்முறைகள், பாலியல் குற்றங்களில் மகளிருக்கு எதிரான நிலைப்பாடு, இளம் பெண்கள், சிறுமிகள் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்கள், குடும்ப வன்முறை, வேலையில் பாலின பாகுபாடு, திருமணத்தில் பெண் விருப்பம் நிராகரிப்பு, குழந்தை திருமணம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் பல மடங்கு அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என்று வல்லூநர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தான், சிரியா ஆகியவை முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளன. சவூதி அரேபியா 5-வது இடத்திலும், பாகிஸ்தான் 6-வது இடத்திலும், அமெரிக்கா 10-வது இடத்திலும் உள்ளன. இதே நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் பெண்களுக்கு ஆபத்து மிக்க பட்டியலில் இந்தியா 4-ம் இடத்தில் தான் இருந்தது.
இந்தியாவை பொறுத்த வரை நிர்பயா விவகாரத்திற்கு பின்னரும் கூட போதிய விழிப்புணர்வோ, தடுப்பு நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை என ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் 2007 முதல் 2016-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 83 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு 4 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அரசியல் ஸ்திரமற்ற பாகிஸ்தானில் கூட பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகம் நிகழ்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.