மூன்று குழந்தைகள் கண் முன் கடல் அலையில் சிக்கி இறந்த தாய்; அம்மா அம்மா என கதறிய குழந்தைகள்!!
கணவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, கடல் அலையில் சிக்கி மனைவி உயிரிழந்த பரிதாபகர சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது

இன்றைய நவீன காலகட்டத்தில் செல்போன்கள் இன்றியமையாததாக மாறி விட்டன. அதில், இருக்கும் கேமிராக்கள் மூலம் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி, லைக்ஸ் அள்ளும் நடைமுறைகளும் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற புகைப்படங்கள் எடுப்பதற்காக ஆபத்தை உணராமல் சாகசம் செய்வதும், ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதும் வழக்கமாகி வருகிறது. இதனால், பல சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இதுதொடர்பாக ஏராளமான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டாலும் பொதுமக்கள் அதனை கண்டுகொள்ளாமல் நடந்து கொள்வதும், அதனால், ஏற்படும் உயிரிழப்புகளும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கணவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, கடல் அலையில் சிக்கி மனைவி உயிரிழந்த பரிதாபகர சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் அந்த தம்பதியின் மூன்று குழந்தைகளின் கண் முன்னே நடந்துள்ளது. இதனை கண்ட அக்குழந்தைகள் அம்மா.. அம்மா.. என்று கதறி அழுத காட்சிகள் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
மும்பையை சேர்ந்த ஜோதி சோனார் எனும் 27 வயதான பெண் ஒருவர், பாந்த்ரா ஃபோர்ட் அருகே உள்ள கடற்கரையில் இருக்கும் கற்கள் மீது அமர்ந்து தனது கணவர் முகேஷுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். இதனை அந்த தம்பதியின் மூன்று குழந்தைகளும் சற்று தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, கடலில் உயர் அலைகள் ஏற்பட்டுள்ளது. இதனால், கற்கள் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஜோதி சோனார் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
வட மாநிலங்களை புரட்டிப்போட்ட கனமழை.. தமிழகத்தின் 75,000 லாரிகள் சிக்கியது - மீண்டு (ம்) வருமா?
ஜோதி சோனார் கடல் அலையில் அடித்துச் செல்லப்படும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவரது மூன்று குழந்தைகளும் அம்மா... அம்மா... என்று கதறி அழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இது தொடர்பான தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். சுமார் 20 மணி நேர தேடலுக்கு பின்னர், ஜோதி சோனாரின் சடலத்தை மும்பை கடலோர காவல்படையினர் மீட்டனர்.
இதுகுறித்து அவரது கணவர் முகேஷ் கூறுகையில், தன்னை ஒரு நபர் இழுத்ததால் தான் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். “ஆனால், எனது மனைவி ஜோதி சோனார் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார். நான் எனது சமநிலையை இழந்து விட்டேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாங்கள் இருவரும் கடலில் நழுவினோம். நான் என் மனைவியை காப்பாற்ற முயன்றேன். அப்போது, என்னை ஒருவர் பிடித்து இழுத்து காப்பாற்றினார். ஆனால், எனது மனைவியை காப்பாற்ற முடியவில்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.