Woman arrested for cheating over 10 youth
பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் இருந்தாலும், தவறான வழிகளில் பணம் சம்பாதிப்பது என்பது நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ருதி என்ற பெண் திருமணம் செய்து கொள்வதாக கூறி 45 லட்சம் ரூபாய் அபேஸ் செய்துள்ளார். 45 ஆண்களிடம் இதுபோல் கூறி ஏராளமான பணத்தை அவர் சுருட்டியுள்ளார். இதேபோல் கோவையைச் சேர்ந்த கல்யாண மன்னன், இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்வதாக கூறி 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் 20 கோடி ரூபாய்க்கும் மேல் சுருட்டி உள்ளது தெரியவந்துள்ளது. தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பணம் பெற, திருமணம் என்னும் பெயரில் மோசடி சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருவது நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தகவல் தொழில் நுட்பங்களும், நாகரீகமும் வளர்ந்து வரும் வேளையில், ஆங்காங்கே நூதன முறையில் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் கேரள மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஷாலினி என்பவர், நாளிதழில், தான் கணவனை இழந்த பெண் என்றும், மறுமணம் செய்ய மணமகன் வேண்டும் என்றும் விளம்பரம் அளித்துள்ளார். அவரின் விளம்பரத்தைப் பார்த்த இளைஞர் ஒருவர், ஷாலினியைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஷாலினி, அந்த இளைஞரிடம் ஏகப்பட்ட பொய்களைக் கூறியுள்ளார்.
தான் மெய்ப்பொறியாளர் என்றும் விரைவில் தமக்கு அரசு வேலை கிடைக்கப் போகிறது என்றும் அந்த இளைஞரிடம், ஷாலினி பொய் கூறியிருக்கிறார். மேலும், தான் ஒரு அனாதை என்றும் ஷாலினி கூறியிருக்கிறார். அவரின் பேச்சை உண்மை என்று நம்பிய இளைஞர், ஷாலினியை திருமணம் செய்ய திட்மிட்டுள்ளார். ஷாலினிக்கும் அந்த இளைஞருக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடத்தப்பட்டன.
திருமணத்துக்கு, அந்த இளைஞரின் நண்பர் ஒருவர் வந்துள்ளார். அவர் ஷாலினியைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனென்றால் நண்பரின் முன்னாள் மனைவிதான் ஷாலினி. ஷாலினி, திருமணம் எனும் பெயரில் இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்று அப்போது அவர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து, ஷாலினி மீது, அந்த இளைஞர் புகார் கொடுத்துள்ளார். ஷாலினியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இதுபோல் 10-க்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து, அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை திருடியது தெரியவந்துள்ளது. மேலும் ஷாலினியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
