வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா? என்ன சொல்கிறார் பெட்ரோலிய அமைச்சர்?
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக பெட்ரோல் விற்பனை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்படும் என நம்புவதாகவும் ஆனால் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படாது எனவும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. மாறாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அமெரிக்காவில் ஏற்பட்ட புயலின் காரணமாகவே பெட்ரோலியப் பொருட்களின் சர்வதேச சந்தையில் அதிகரித்ததாகவும் அதில் விலை குறைவு ஏற்பட்டால் இங்கும் பெட்ரோல், டீசல் விலை குறையும். கடந்த 3 நாட்களாக பெட்ரோல் விலை குறைந்துவருவதாகவும் விரைவில் மேலும் விலை குறையும் எனவும் தெரிவித்தார்.
பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்படும் என தான் நம்புவதாகவும் அனைத்து மாநிலங்களின் சம்மதத்துடன் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.