மழையால் கண்ணீரை வரவழைக்கிறதா வெங்காயம்..? வெங்காயத்தைப் பதுக்கினால் குற்றம் என அறிவிப்பு!
அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில், வெங்காய உற்பத்தி குறைந்தால், மக்கள் பாதிப்படையும் நிலையும் ஏற்படும். வெங்காய விலை உயரும் என்பதால் சிரமம் ஏற்படும் என்றும் ஊகிக்கப்பட்டுள்ளது.
வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தாலோ, லாபகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
தினசரி சமையலில் தவிர்க்க முடியாத உணவுப் பொருள் வெங்காயம். இந்த வெங்காய உற்பத்தியில் நாட்டில் மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களே முன்னிலையில் இருந்துவருகின்றன. அண்மையில் இந்த இரு மாநிலங்களிலும் பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிடப்பட்டிருந்த விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இதன் காரணமாக வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டு வினியோகத்தில் சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில், வெங்காய உற்பத்தி குறைந்தால், மக்கள் பாதிப்படையும் நிலையும் ஏற்படும். வெங்காய விலை உயரும் என்பதால் சிரமம் ஏற்படும் என்றும் ஊகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்கூட்டியே ஆலோசிக்க மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை அண்மையில் உயர் மட்டக்குழு கூட்டத்தை கூட்டியது. இந்தக் கூட்டத்தில் வெங்காய விலை நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் வெங்காய உற்பத்தி மற்றும் அதன் விலை நிலவரம் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “வெங்காயத்தின் விலையை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தாலோ, அதை லாபகரமானதாக ஆக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் வெங்காய ஏற்றுமதி குறித்தும் ஆராயப்படும்” என்று தெரிவித்தன.