கடந்த மக்களவைத் தேர்தலைப் போல இந்த முறையும் பிரதமர் நரேந்திர மோடி இன்னொரு தொகுதியில் போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. மோடிக்கு இன்னொரு தொகுதியைத் தருவதில் ஒடிஷா - கர்நாடகா பாஜக இடையே போட்டி நிலவிவருகிறது. 

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வாரணாசி, வதோதரா என 2 தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிட்டார். தேர்தலுக்கு பிறகு வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்த முறையும் பாஜகவுக்கு வலுவூட்டும் முயற்சியாக, மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் எனத் தொடக்கம் முதலே தகவல்கள் வெளியாகிவந்தன. குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்ந்து நடைபெறும் ஒடிஷாவில் உள்ள புரி தொகுதியில் மோடி போட்டியிடுவார் எனக் கூறப்பட்டுவருகிறது.


தெற்கு பெங்களூருவில் கடந்த 1991-ம் ஆண்டு முதலே பாஜக வெற்றி பெற்றுவந்திருக்கிறது. மேலும் மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் 1996 முதல் 2014 வரை தொடர்ச்சியாக 6 முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் தொகுதியில் அனந்தகுமாரின் மனைவி தேஜஸ்வினிக்கு சீட்டுக் கொடுக்க பாஜக முடிவு செய்திருந்தது. இந்நிலையில் பெங்களூரு தெற்கில் மோடி போட்டியிடுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
 “மோடி தெற்கு பெங்களூருவில் போட்டியிட்டால், கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகளில் பாஜக வெல்லும்” என்று கர்நாடக பாஜகவினர் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.